சிஷ்யன் பின்னாலேயே குரு, குருவின் பின்னாலேயே பெருமாள், பெருமாள் பின்னாலேயே ஊரில் உள்ள மக்கள் எல்லோருமே கிளம்பி விடுகிறார்கள், காஞ்சியை விட்டு. பல்லவ மன்னன் தான் அறியாது செய்த பிழைக்காக இரங்கி ஓடிச் சென்று கணிகண்ணன் காலில் விழுந்து அவனைத் திரும்பும்படி அழைக்கிறான். அவனும் பிகு பண்ணாமல் ஊர் திரும்புகிறான். மழிசையாரும் திரும்புகிறார், பெருமாளுக்கு மாற்று உத்தரவு போட்டு விட்டு.
கணிகண்ணன் போக்கொழிந்தான்காமருபூங்கச்சி மணிவண்ணா! நீகிடக்க வேண்டும் - துணிவுடைய செந்நாப் புலவனும் செலவுஒழிந்தேன் நீயும்உன்றன் பைந்நாகப் பாய்விரித்துக் கொள்!
என்பதே மாற்று உத்தரவு. உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறார் பெருமாள். இந்தப் பெருமாள் அன்று முதல் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று பெயர் பெறுகிறார். இந்த யதோத்காரியே கோமளவல்லியுடன் திருவெஃகாவில் நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கிறார்.
இந்தப் 'பைந்தமிழ்ப் பச்சைப் பசுங்கொண்டலின்’ இலக்கியப் பிரசித்தியோடு போட்டி போட்டுக் கொண்டு, காஞ்சியில் மற்றோர் இடத்தில் கொலுவிருப்பவனே வைகுந்தப் பெருமாள். சிற்பக் கலைக்குச் சிவன் அளித்த பரிசு கைலாசநாதர் கோயில் என்றால், விஷ்ணு அளிக்கும் பரிசு இந்தப் பரமேசுவர விண்ணகரம்.
இதில் விசேஷம் என்ன வென்றால், கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் மகனான பரமேசுவரவர்மனே வைகுண்டப் பெருமாளுக்கு இந்தப் பரமேசுவர விண்ணகரத்தைக் கட்டியிருக்கிறான். அத்தனை சமரச மனோபாவம் தந்தைக்கும் மகனுக்கும்.