பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

123

விடுவார். (சரிதான், இவர் கும்பகர்ணனையுமே தூக்கி அடிக்கும் நித்ரத்வப் பெருமை உடையவர் போலும்!)

இந்த அத்திரவரதரே ஆதிவரதர் என்பது கர்ண பரம்பரை. இவற்றையெல்லாம் பார்த்த பின்னும், அவகாசம் இருந்தால், இக்கோயிலிலேயே பெரிய கோபுரமாக விளங்கும் கீழக் கோபுரத்தையும் பார்க்கலாம். நந்தவனம் முதலியவைகளையும் கண்டு களிக்கலாம்.

வரதர் கோயிலை விட, அவருக்கு நடக்கும் உத்சவங்கள் பிரசித்தமானவை. வரதரது பிரம்மோற்சவம் பங்குனி சித்திரை மாதங்களில் நடக்கும். பிரம்மோற்சவத்தை விடப் பிரசித்தியுடையது வைகாசி பூர்ணிமையில் நடக்கும் கருடசேவை. அதிகாலையிலேயே வரதராஜர் கருடன் மீது ஆரோகணித்துக் கோயிலை விட்டுப் புறப்படுவார். இந்தக் கருடசேவையைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்துக் கிடப்பார்கள், வீதிகளில்.

'அஞ்சேல்' என்று அருள் புரியும் அத்திகிரி அருளாளன் சங்கு சக்ரதாரியாகக் கருடன் மீது கம்பீரமாக எழுந்தருளும் காட்சிகண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். 'கஞ்சி வரதப்பா' என்றால், 'எங்கு வருதப்பா?’ என்று கேட்கும் ஏழை ஏதலர்கள் மலிந்த நாட்டிலே கஞ்சிவரதன் எல்லோருக்கும் அருள்புரியும் அருளாளனாக இருக்கிறான் என்ற நம்பிக்கையே மக்கள் உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.

இந்த அத்தி வரதர் அருளுக்குப் பாத்திரமான பக்தர்கள் எத்தனையோ பேர். காஞ்சியிலே மனைவியுடன்தங்கியிருந்து குடும்பம் நடத்திப் பின்னர் துறவு மேற்கொண்டவர், ராமானுஜர், காஞ்சியில் இருந்தபோது, அருளாளன் அபிஷேகத்துக்கு இரண்டு மைலுக்கு அப்பால் உள்ள சாலைக் கிணற்றில் இருந்து திருமஞ்சன தீர்த்தத்தைச் சுமந்து கொண்டிருந்தவர் அவர்.