தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
129
இந்தத் திருஊறல் என்ற தலத்திலே பிரதானமான கோயில் கங்காதரர் கோயில் அல்ல. கங்காதரர் கோயிலுக்குத் தெற்கே மேற்கு நோக்கிய பிரதான வாயிலுடன் இருப்பதே உமாபதி ஈசுவரர் கோயில், இங்கு உமாபதி உமையம்மையுடன் கோயில் கொண்டிருப்பதில் வியப்பில்லையே.
இவர்கள் இங்கே எப்படி உருவானார்கள்? ஆம்! அன்று பிரமனும் விஷ்ணுவும் இறைவனது திருமுடி காணாமல் ஏமாற்றம் அடைந்து விட்டனர், திருவண்ணாமலையிலே. பின்னர் தந்தையும் மகனுமாகச் சேர்ந்து, சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு, பிரார்த்தித்துக் கொள்கிறார்கள், இறைவன் திரு உருவைக் காண. இதே சமயத்தில் பிருகஸ்பதியின் தம்பியான சம்வர்த்தனரும் இறைவன் திருக்கோலத்தைக் காணத் தவம் கிடக்கிறார், இந்தத் திருஊறலிலே.
இந்த மூவர் விருப்பத்தையும் பூர்த்தி பண்ணும் பெரு நோக்குடன், உமா பதி தமது துணைவி உமையையும் அழைத்துக் கொண்டே வந்து விடுகிறார், இந்தத் தலத்துக்கு. மூவரும் பெறுதற்கரிய பேறு பெறுகின்றனர் அங்கே. இந்தத் தலத்துக்குச் சம்பந்தர் வருகிறார். இறைவனை வாயாரப் புகழ்ந்து பாடுகிறார். அவருக்குப் பழைய கதைதான் தெரியும். அதன் பின் நடந்த புதிய விருத்தாந்தம் எல்லாம் தெரியாது. ஆதலால்,
நீரின் மிசைத் துயின்றோன், நிறைநான்
முகனும் அறியாது அன்று,
தேரும் வகை நிமிர்ந்தான், அவன்
சேரும் இடம் விரைவில்
பாரின் மிசை அடியார் பலர்வந்து
இறைஞ்சி மகிழ்ந்து, ஆகம்
ஊரும் அரவு அசைத்தான்
திரு ஊறலை உள்குதுமே!
என்றுதான் பாடுகிறார்.
வே-கு:9