பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வேங்கடம் முதல் குமரி வரை

கோயில் நிரம்பப் பெரியதுமல்ல, சிறியதுமல்ல. உள்கோபுர வாயிலிலே வலப்பக்கம் இருப்பவர் சித்தி விநாயகர். விநாயகர் பிரம்மசாரி என்றுதானே அறிவோம். இல்லை, அவருக்குச் சித்தி புத்தி என்று இரண்டு மனைவியர் என்றும் கூறுவர். ஞானமாம் புத்தியை மனைவியாகப் பெற்றால், பெறற்கரிய சித்திகள் எல்லாம் தானே வந்து அடையாதா? அந்தச் சித்தியையே {ஆம், பெண்ணுருவில் இருக்கும் சித்தியைத்தான்) தன் மடி மீது வைத்துக் கொண்டிருக்கும் கோலத்தில் இங்கு விநாயகரைப் பார்க்கிறோம்.

சித்தி விநாயகரை வணங்கி, அவர் அருள் பெற்றுக் கோயிலுள் நுழைந்தால், முதல் முதல் நாம் காண்பது ஊர்த்துவ தாண்டவரையே. தெற்கு நோக்கிய ரத்ன சபையிலே செப்புச்சிலை உருவிலே நிற்கிறார் அவர். ரத்ன சபை என்றால், ஏதோ முழுக்க முழுக்க நவரத்தினங்கள் இழைத்த மண்டபம் என்று நினைத்து விடாதீர்கள். கல்லாலாகிய ரத்தினம்தான். அங்குள்ள மஞ்சத்தில் மற்ற நவரத்தினங்களும் இருக்கலாம். அவையெல்லாம் பளிச் சென்று நம் கண்ணுக்குத் தெரியவில்லை.

இந்த ரத்ன சபையைக் கடந்து சென்றால், உட்பிராகார வாயிலிலே வடக்கு நோக்கிய ஒரு சிறு கோயிலிலே காளி இருக்கிறாள். ஐயோ பாவம்! போட்டியில் தோற்ற அவமானம் தாங்கமாட்டாமல் ஏதோ ஒதுக்குப்புறமாக இடந்தேடி ஒளிந்து கொண்டிருக்கிறாள் அவள். இனி கோயில் உள்ளே கர்ப்ப கிருஹத்தில் இருப்பவர் தேவர்சிங்கப்பெருமான். அவரது துணைவிதான் வண்டார் குழலி. தேவர்சிங்கப்பெருமானை வலம் வந்தால், அகோர வீர பத்திரர் கம்பீரமாக நின்று கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.

இத்தனைதிரு உருவங்களைப் பார்த்தாலும் நமக்குத் திருப்தி ஏற்படாது. ஆலங்காடு என்றவுடனேயே காரைக்கால் அம்மை