பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

151

இக் கோயில் அன்று பூசலார் உள்ளத்தில் ஒளிந்திருந்தது போல், இன்றுமே நின்ற ஊரிலே ஓர் ஒதுக்குப்புறத்திலேயே இருக்கிறது. இருந்தாலும் இக்கோயிலைத் தேடிப்பிடித்துத் திருப்பணி செய்திருக்கிறார் ஓர் அம்மை. அவர்தான் தேவகோட்டை சீதை ஆச்சி என்பவர். கோவை மில் அதிபர் திரு. சோமசுந்தரம் செட்டியாரின் தாயார். அவர் பூசலார் பக்திக்குத் தலை வணங்குவது போல், இந்தச் சீதை ஆச்சியின் 'பக்தி சிரத்தைக்கு மே தலை வணங்கலாம்.

இந்தத் திருநின்றவூர், பூசலார் பத்தவத்சலர் என்ற இருவரால் மட்டுமே பிரசித்தி அடைந்தது என்றில்லை. இந்த ஊரிலே இருந்த ஒரு ரஸிகர், கொடை வள்ளல் காளத்திவாணர் என்பவராலும் இலக்கியப் பிரசித்தி பெற்றிருக்கிறது.

இந்த நின்றைக் காளத்திவாணர் புலவர்களை ஆதரிக்கும் வள்ளல். ஆதலால் வறுமையால் வாடும் புலவர்கள் எல்லாம் இவரைத் தேடி வருவதுண்டு. அப்படி வருகிறான் ஒரு கவிஞன்.

நீண்ட நாளாக வறுமையுடன் போராடிய அவன், நின்றையூர் நோக்கி வருகிற வழியில் இருட்டி விடுகிறது. நின்றையூருக்கு அயலிலே உள்ள ஒரு சிறு கிராமத்தின் சத்திரத்தில் தங்குகிறான். அங்குள்ளவர்களும், காளத்திவாணரின் கொடையையும் ரஸிகத் தன்மையையும் பாராட்டிப்பேசுவதையெல்லாம் கேட்கிறான். ஒரு நம்பிக்கை பிறக்கிறது உள்ளத்தில்.

மறுநாட் காலை காளத்திவாணரைக் கண்டுவிட்டால், தன் வறுமை தன்னை விட்டுத் தொலை தூரத்தில் ஓடிவிடுமே. ஐயோ, பாவம்! அது இன்றைக்கு ஒரு நாளாவது நம்மிடம் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பரிவுடன் நினைக்கிறான் தன்னைத் தொடர்ந்து வந்த வறுமையை. இந்தப் பரிவு ஒரு பாட்டாகவே வெளிவருகிறது அந்தச் சத்திரத்தில் அன்றிரவு.