பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

இத்தனை விஷயங்கள் தெரிந்தாலும், இன்னும் ஒரு குறை வாசகர்களுக்கு இருக்கவே செய்யும். திரு ஒற்றியூர் என்றால் பட்டினத்தார் ஞாபகத்துக்கு வருகிறாரே. அவருடைய ஞாபகச் சின்னம் ஒன்றும் இல்லையா இங்கே என்று கேட்கத் தோன்றும்.

ஒ, அதுவா! பட்டினத்தார் சமாதியையா கேட்கிறீர்கள் என்று சொல்லி, ஊரில் உள்ளவர்கள் கடற்கரைப் பக்கம் கையைக் காட்டுவார்கள். நாம் அங்குச் சென்றால் செல்லும் வழியிலே வலக் கைப் பக்கம் ஒரே சமாதிக் கூட்டங்கள் தென்படும். அங்குச் சென்றால் தகரக் கொட்டகையும் கள்ளிக்கோட்டை ஓடும் வேய்ந்த ஒரு சிறு கட்டடம் தெரியும். அங்குதான் பட்டினத்தார் மாடு மேய்க்கும் பையன்களுடன் விளையாடி, சாலுக்குள் மறைந்து, சமாதியடைந்தா ரென்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்.

கடல் அருகே கரும்பைச் சுவைத்த அவரது திரு உருவம் செப்புச் சிலை வடிவில் இருக்கும். கரும்பேந்திய கையராய் அவர் நிற்பார், அங்கே. அவரைத் தொழுதுவிட்டு வெளியே வந்து, வலது பக்கம் நோக்கினால் அங்கு ஒரு கட்டடம். கட்டட வாயிலில் உள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தால் அதிசயிப்போம். காரணம், அது வட்டார அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் அமைந்த, மகப்பேறு மருத்துவ இல்லம் ஆகும்.

'பார் அனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் யாரும் துறத்தல் அரிது அரிது!’ என்று பறை சாற்றும் பட்டினத்தார் சமாதியின் பக்கத்திலா மகப்பேறு மருத்துவ இல்லம் என்று வியப்போம். அதை அங்கு நிறுவிய அன்பர்களின் கலா ரசனையைக் கண்டு சிரிப்போம்.

ஒரே ஒரு சமாதானம். பிறந்த பின்தானே துறக்கும் எண்ணம். ஆதலால் பிறவியும் துறவும் அடுத்தடுத்து வருவது வாழ்வில் சகஜந்தான் என்று தேற்றிக் கொள்ளலாம்.