பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

185

இவருக்கும் வாயிலாருக்கும் ஒரு அரிய ஒற்றுமை. இறைவனை மனக் கோயில் உள்ளிருத்தி வழிபட்டவர் வாயிலார் என்றால், இவருமே 'மாகடல் நீர் உள்ளான் மனத்து உள்ளவனே!' என்றும், 'உளன் கண்டாய்' 'உத்தமன் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்!' என்றுமே பாடிக் குருந்தொசித்த கோபாலனைக் குறிப்பார்.

இந்தப் பேயாழ்வாரையும் வாயிலாரையும் விடப் பிரசித்தி பெற்ற திருவள்ளுவர் வாசுகியோடு இருத்து இல்லறம் நடத்திய இடமும் இம் மயிலாப்பூரேயாம். வள்ளுவர் பெருமையோ அளவிட்டு உரைக்கும் தரத்தது அன்று.

இன்னும் சமண சமயத்தைச் சேர்ந்த பண்டிதர் சிலர் மயிலாப்பூரிலே இருந்துதான் தமிழ் வளர்த்திருக்கிறார்கள். நேமிநாதம் எழுதிய நேமிநாதர் இங்கே இருந்திருக்கிறார். அவருக்கு என்று ஒரு சிறு கோயில் இவ்வூரில் இருந்ததாகவும், அந்தக் கோயிலில் இருந்த நேமிநாதர் சிலையைப் பெயர்த்து எடுத்துத் தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சித்தாமூர் ஜைன ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்றும் கதை. இப்படியே சைவ வைணவ ஜைன சமரச பீடமாக மயிலாப்பூர் விளங்கி இருக்கிறது, அந்நாளிலே.

இன்னும் வேதாந்த சாரமான பாடல்களைத் தாயுமானவர் அடிச் சுவட்டிலே நின்று பாடிய மஸ்தான் சாகிபு இந்த மயிலாப்பூரிலே வாழ்ந்தவர்தானாம்.

மேலும் ஸெயின்ட்தாமஸ் என்னும் கிறிஸ்துவஞானி வந்து சமாதி ஆன இடமும் இதுவே. அவர் கல்லறையைச் சுற்றி உருவான ஊரையே சாந்தோம் என்று குறுக்கிச் சொல்கிறார்கள். மயிலாப்பூர் வக்கீல் பரம்பரை மிகவும் பிரசித்தமானதாயிற்றே. பேரும் புகழும் படைப்பது இத்தல விசேஷத்தினால்தானோ என்னவோ, யார் கண்டார்கள்? வாசகர் மயிலையில் இடம் தேடிக் கற்றவர் ஏத்தும் கபாலீச்சரம்' ஓடினால் அதிசயமில்லை.