பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21. வான்மியூர்ப் பால்வண்ணர்

லக மகா கவிஞர் வரிசையிலே, ஆதி கவி என்னும் புகழுக்கு உரியவர் வான்மீகர். அவர் எழுதிய ராமகாதை ராமனது காலத்திலேயே பாடப்பட்டிருக்கிறது. வான்மீகரது கவித்வம் ஒப்புயர்வற்றது என்பர் வடமொழி தெரிந்தவர்கள்.

அந்த கவித்வத்தைவிட உயர்ந்தது அவர் சொல்கிற கதை. சக்கரவர்த்தித் திருமகனான ராமனது சரிதம், எவ்வளவோ நல்ல பல நீதிகளைத் தன்னுள் கொண்டது. அவைகளை மக்கள் கற்று அதன் மூலமாக நல்லொழுக்கமுடையவர்களாக வாழ உதவுவது. அதிலும் இன்றும் அதிகம் பேசப்படும் உலக சகோதரத்துவத்துக்கே அடிகோலுவதாகவும் இருக்கிறது.

இந்தக் கதை கவிச் சக்கரவர்த்தி கம்பனையும் பரம பக்தனான துளசிதாசனையும் கவர்ந்ததில் வியப்பில்லை. அதனால் தானே ஒரு ராமாயணமும் ஒரு ராம சரித மானஸும் இந்திய மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

ஸரயு நதிக்கரையில் பிறந்து கங்கை நதிக்கரையிலே வளர்ந்த ராமனைக் காவேரி தீரத்துக்கே கொண்டு வந்து, அவனை ஒரு நல்ல காவேரி தீர, ரஸிகனாக ஆக்கியிருக்கிறான், கம்பன். உண்மையிலே ராமன் வடநாட்டை விட்டுத் தென் தமிழ் நாட்டுக்கே குடி வந்து விட்டான் என்றே தோன்றும், இங்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள கோயில்களைக் கணக்கிட்டால்.

ராமன் வந்து விட்டால், ராமனை உருவாக்கிய வான்மீகருக்கு வட நாட்டில் என்ன வேலை? ராமனைத் தேடிக் கொண்டே, அவன் வழியைப் பற்றிக் கொண்டே, வான்மீகரும் இங்கு வந்து விடுகிறார். (பல கோயில்களில் இருக்கும் வான்மீக நாதரை - அதாவது புற்றிடம் கொண்ட பெருமானாக எழுந்தருளியிருக்கும் மூர்த்தங்களைக் குறிப்பிடவில்லை, நான்.) பல தலங்களில், ராமன் இல்லாத தலங்களில் கூடத் தங்கி விடுகிறார், வான்மீக முனிவர்.