பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

வேங்கடம் முதல் குமரி வரை

இந்தத் தியாகராஜரை வணங்கிய பின், வடக்கே திரும்பி நடந்தால், மகாமண்டபம் வந்து சேருவோம். அங்கு மேற்கு நோக்கிய சந்நிதியில் இருக்கிறார் மருந்தீசர்.

வேதங்கள் எல்லாம் வழிபட்டதால் வேதபுரி ஈசுவரர் என்றும், காமதேனுவே பால் சொரிந்து அபிஷேகம் ஆட்டியதால் பால்வண்ண நாதர் என்றும் பெயர் பெற்றிருக்கிறார். லிங்கத் திருவுருவில் இருக்கும் இவர் கொஞ்சம் வடபால் சாய்த்திருக்கிறார். ஆம், வடநாட்டிலிருந்து தென்னாடு வந்து தங்கியவர் அல்லவா, வான்மீகர். ஆதலால் அவருக்காகக் கொஞ்சம் வடபால் தலைசாய்த்து, அழைத்திருக்கிறார் போலும்.

காமதேனு பால் சொரிந்து அபிஷேகம் செய்தபொழுது; அதன் குளம்பு வேறே பட்டிருக்கிறது. அதனால் ஒரு பக்கமாகச் சாய்ந்தாரோ என்னவோ? அந்தக் குளம்பு பட்ட வடு வேறே லிங்கத் திருவுருவில் இருக்கிறது.

பால் அபிஷேகம் பண்ணும்போது அந்த வடு தெரிகிறதாம். இந்த லிங்கத்திருவுரு தேவர்கள் பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிழ்தத்திலேயே ஆனவராம். அதனால்தான் அவரை அமுதீசர் என்றும் மருந்தீசர் என்றும் குறிக்கிறார்கள். தேவர் துயர் தீர்க்க எழுந்த மருந்துதானே அமுது. அமுதீசரை வணங்கினால் நமது துயரும் துடைக்கப்படும்தானே. இதைத் தெரிந்தே பாடுகிறார்கள் சம்பந்தரும், அப்பரும்.

பொன்போலும் சடைமேல் புனல்தாங்கிய புண்ணியனே!
மின்போலும் பரிநூல் விடைஏறிய வேதியனே!
தென்பால் வையமெலாம் திகழும் திருவான்மிதன்னில்
அன்பா! உன்னையல்லால் அடையாது எனது ஆதரவே!

என்று சம்பந்தர் பாடினார்.