பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

195

இந்த ஆண்டவருக்குக் கோயில் கட்ட இன்னொரு அன்பர் வரவேண்டி இருந்திருக்கிறது. பாக்கியலிங்கத் தம்பிரான் என்பவரே கோயில் திருப்பணியை ஆரம்பித்துச் செய்து முடித்திருக்கிறார்.

இப்படி மூவரால் உருவாக்கப்பட்ட கோயிலே இன்று பிரபலமாக இருக்கும் வடபழனி ஆண்டவர் கோயில். இந்தக் கோயிலில் மூல மூர்த்தியாக இருப்பவர், அந்தத் தென்பழனியில் உள்ளவரைப் போல, மெலிந்து தேய்ந்தவர் அல்ல, நல்ல திடசரீரி. அதோடு நிற்கும் ஸ்டைலும் மிக்க அழகு. இவரையே,

கண்டார் தம்மனம் கவரும் முண்டிதமாம்
சிரத்து அழகும் காணக் காணக்
கொண்டாடத் தக்க திருநீற்று அழகும்
கண்டிகையின் கோலச் சீரும்
பண்டாய நான்மறைக் கோவணச் சீரும்
கொண்டு வடபழனி மேவும்
தண்டாயுதப் பெருமான்

என்று தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்கள் பாடியிருக்கிறார்கள். சென்னையில் உள்ளவர்களும் சென்னைக்குச் செல்பவர்களும் அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் பூக்கடைக் கந்தசாமி கோயிலுக்கும் கோடம்பாக்கம் வடபழனி ஆண்டவர் கோயிலுக்கும் சென்று முருகனை வணங்கலாம். வந்தித்து வாழ்வு பெறலாம்.

இன்று நான் உங்களை அழைத்துச் செல்ல விரும்புவது, சென்னைக்கு அணித் தேயுள்ள மற்றொரு பிரபலமான முருகன் கோயிலுக்கே. அந்தக் கோயில்தான் திருப்போரூர்க் கோயில், சென்னையிலிருந்து மகாபலிபுரம் என்று வழங்கும் மாமல்லபுரம் செல்லும் வழியில் முப்பத்து. ஆறு மைல் தூரத்தில் உள்ள சிறிய ஊர் அது.