பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

211

ஒன்று சிவனுக்கு, ஒன்று விஷ்ணுவுக்கு என்று பங்கு. சிவனது லிங்கத் திருவுருவைவிட, ஜலசயனனாக இருக்கும் பெருமாள் மிகவும் காத்திரமான வடிவம். கையில் டார்ச் இருந்தால், இருட்டில் புதைந்து கிடக்கும் அவரை நன்றாகத் தரிசிக்கலாம். பூஜை புனஸ்காரத்தை எல்லாம் தலசயனருக்குக் கொடுத்து விட்டு, இந்த ஜலசயனர் ஒதுங்கியே வாழ்கிறார்.

இந்தக் கோயில்களை அடுத்த கடற்கரை அழகானது. எவ்வளவோ பகுதிகளைக் கடல் கொண்டு போய்விட்டது என்பர். இருக்கிற பகுதியைக் கூட விழுங்க வருவதுபோலவே கடல் அலை அலையாக வந்து மோதும். கொண்டு வந்திருக்கும் கட்டமுதை இங்கு அவிழ்க்க வேண்டியதுதான். அதைக் கொண்டு வர மறந்தவர்கள் அங்கு விற்கும் பட்டாணிக் கடலையை மெல்லுவதுடன் திருப்தி அடைய வேண்டியதுதான்.

தமிழ் நாட்டில் கலை வளர்த்த பேரரசர்களில் தலையாய மகாமல்லன் புகழ் எல்லாம் இந்தக் கடல் மல்லையிலே கற்பாறை காட்டும் கவின் உருவிலேயே அடங்கிக் கிடக்கின்றன என்று சொன்னால் வியப்பில்லை. தமிழ் நாட்டின் கலைச் செல்வம் என்று உலகோர் எல்லாம் வியந்து நிற்கும் கடல் மல்லையை மகாமல்லன் பேரால் மாமல்லபுரம் என்று அழைத்ததுதான் எவ்வளவு பொருத்தம்.

மாமல்லனது கனவெல்லாம் நனவான இடம் அது. நமக்கும் நம் நாட்டைப் பற்றி, நம் மொழியைப் பற்றி, நம் கலைகளைப் பற்றி, நம் இலக்கியங்களைப் பற்றி எத்தனையோ கனவுகள். அதெல்லாம் நனவாக வேண்டுமென்றால் மாமல்லபுரத்துக்கு ஒரு தடை விறுவிறு என்று போய்த் திரும்பிய உடனடியாகவே காரியத்தைத் துவங்கலாம். அப்போது நம் கனவம் நனவாகும் என்று நம்பலாம்.