பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

வேங்கடம் முதல் குமரி வரை

அப்போதுதான் விழித்துக் கொண்ட கம்பன், அப்பரம பாகவதருக்குப் பதில் சொல்கிறான். கவிச் சக்கரவர்த்தி அல்லவா? பதில் பாட்டாகவே வருகிறது. பாட்டு இதுதான்:

'நாராயணாய நம' என்னும் நல்நெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்து ஏத்துமாறு அறியேன்
கார்ஆரும் மேனிக்கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே!

என்ற பாடலைப் பரம பாகவதருடன் சேர்ந்து நாமும் கேட்கிறோம்.

கோயிலை அறிந்தாலும் கும்பிடத் தெரியாத தன் அறியாமையை எவ்வளவு எளிமையோடு சொல்கிறான்! அதைவிட அவன் ஆராதனைக்குக் கொண்டு வந்த பொருள் தன் அறியாமையே என்று சொல்கிறபோது, எத்தகைய விளக்கம் பெறுகிறோம்! உண்மைதானே. இறைவனையும் பெரியவர்களையும் அணுகும்போது, நாம் கொண்டுபோக வேண்டுவது நம்மிடம் நிறைய இருப்பதும், அவர்களிடம் கொஞ்சமும் இல்லாததுமான பொருளைத்தானே கொண்டு போய்க் காணிக்கையாக வைத்து ஆராதிக்க வேண்டும்! நம்மிடம் நிறைய இருப்பது அறியாமை, இறைவனிடத்துக் கொஞ்சங்கூட இல்லாதிருப்பதும் அறியாமை. ஆதலால் நமது அறியாமையையே ஆராதனப் பொருளாகக் கொண்டு கொட்ட வேண்டியதுதானே.

அதைத்தானே செய்கிறான் கம்பன். நம்மையும் செய்யும்படி வற்பறுத்துகிறான். இப்படிக் கம்பன் ஆராதித்த கோதண்டராமனை, அந்த ராமன் ஆராதித்த கருணாகரனைக் காணக் கம்பன் சென்ற ஊருக்கே நாமும் செல்ல வேண்டாமா? அந்த ஊர்தான் மதுராந்தகம்.