பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

241

மதுராந்தகம் செங்கல்பட்டு ஜில்லாவிலே உள்ள தாலுக்காவின் தலைநகரம். நிரம்பச் சிறிய ஊரும் அல்ல. நிரம்பப் பெரிய ஊரும் அல்ல. சென்னைக்குத் தெற்கே ஐம்பது மைல் தூரத்திலே இருக்கிறது இந்த ஊர். ரயிலிலும் பஸ்ஸிலும், ஏன் நல்ல காரிலும் செல்லலாம். இந்த ஊருக்கு வடக்கே இருந்து வந்தாலும், தெற்கே இருந்து வந்தாலும், ஊருக்கு மேற்கே உயர்ந்த கரையோடு கூடிய பெரிய ஏரி நம் கண் முன் வரும்.

அந்த ஏரியின் மறுகாலே கல்லாறு என்ற பெயரோடு ஒரு பெரிய நதியாக ஓடுகிறது என்றால் கேட்டானேன். இந்த ஏரி தமிழ்நாட்டிலுள்ள பெரிய ஏரிகளில் ஒன்று. கரையின் நீளம் 12960 அடி. அதன் நீர்ப்படி பரப்பு பதின்மூன்று சதுர மைல். ஏரி நீர் நிறைந்தால் நூறு அடிக்கு மேல் ஆழம். ஏரிக்கு ஐந்து மதகுகள். அந்த மதகுகள் வழியாகப் பாய்ந்து பெருகும் தண்ணீர் வளர்பிறை அருங்குணம் முள்ளி முன்னத்திக்குப்பம் மதுராந்தகம் முதலிய ஊர்களிலுள்ள 2702 ஏக்கர் நன்செய் நிலங்களில் மூன்று போகம் நெல் விளைவுக்குப் பயன்படுகிறது.

இந்த ஏரியின் தண்ணீர் வழிந்தோட அமைந்திருக்கும் கலிங்கல் நூற்று ஐம்பதடி நீளம் என்றால் ஏரியைக் கொஞ்சம் கற்பனை பண்ணி மானசீகமாகவே பார்த்துக் கொள்ளலாம் தானே. இந்தத் தலத்தில் நாம் முதன் முதலில் காண வேண்டுவது கோதண்டராமன் கோயிலையல்ல, இந்தப் பெரிய ஏரியையும் அல்ல. இந்த ஏரியில் உள்ள இந்தக் கலிங்கலைத்தான். ஆம்! இந்தக் கலிங்கலில்தானே கோயிலினுள் சிலை உருவில் நிற்கும் ராமனும் லக்ஷ்மணனும் சோதி வடிவிலே காட்சி கொடுத்திருக்கிறார்கள் - வெள்ளைக்காரக் கலெக்டர் கர்னல் பிளேசுக்கு.

இந்த ராமன் காரியமே இப்படிதான். நாளும் ராம நாமத்தையே ஸ்மரணை செய்து கொண்டிருக்கும் பக்தர்களுக்குத் தரிசனம் தர மாட்டான். ஆனால் அவனைப் பற்றிக்

வே-கு :16