பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. சிங்கபுரத்து நரசிங்கன்

மகாவிஷ்ணு எடுத்த தச அவதாரத்தில் நரசிம்ம அவதாரம் ஒன்று. மற்ற அவதாரங்களைவிடப் பார்ப்பவர் உள்ளங்களில் அச்சத்தை விளைவிக்கும் பயங்கரமான அவதாரம் அது. மனித உடலும் சிங்க முகமுமாக இருக்கும் உருவம் ஆதலால், பார்ப்பதற்கே அஞ்சுவோம், நாம். உபாசிப்பதற்கோ துணிவு வராது, நமக்கு.

பக்தன் பிரகலாதனுக்காக, இரணியனைச் சம்ஹரிக்கத் தூணைப் பிளந்து கொண்டு உதித்த மூர்த்தி, இரணியன் உடலைக் கிழித்து உதிரம் குடிக்கும் நிலையில், காண்போர் அஞ்சி நிலை குலைவதில் அதிசயம் இல்லைதானே? ஊன் கொண்ட வள் உகிரால் இரணியனை உடல் கிழித்த, நரசிம்ம அவதாரத்தைக் கவிச்சக்கரவர்த்தி கம்பன் மிகவும் அழகாகச் சொல்கிறான். பேரண்டம் முழுவதும் வியாபித்து இருக்கும் பரம்பொருள் தொட்ட தொட்ட இடமெல்லாம் தோன்றுவான் என்கிறான், பிரகலாதன்.

அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்து விட்டு, 'இந்தத் தூணில் இருக்கிறானா? என்று கேட்கிறான், இரணியன். 'இந்தத் தூணில் மாத்திரம் என்ன, நீ சொல்கிறாயே, கடவுளாவது தெய்வமாவது என்று, அந்தச் சொல்லில் கூட அவன் இருக்கிறானே,' என்று வாதமிடுகிறான் பிரகலாதன். இந்த நிலையில் தூணை எற்றுகிறான், இரணியன், தூணில் பிறக்கிறான், நரசிம்மன். கம்பன் சொல்கிறான், அதை:

நசை பிறந்து இலங்கப் பொங்கி
நன்று நன்று என்ன நக்கு
விசைபிறந்து உருமு வீழ்ந்தது
என்ன ஓர் தூணின், வென்றி