பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10. திருவாரூர் தியாகேசர்

கிரேக்க இலக்கியத்திலே ஒரு கதை. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு நாள் டயோஜனீஸ் என்ற ஒரு பெரியவர், ஆதென்ஸ் நகரத்தில் நாலு வீதிகள் சேரும் ஒரு சந்தியிலே பட்டப்பகல் பன்னிரண்டு மணிக்குக் கையில் ஒரு விளக்கை ஏந்திக்கொண்டு எதையோ தேடுகிறார். அங்கு போவோர் வருவோருக்கெல்லாம் இவர் எதைத் தேடுகிறார் என்று விளங்கவில்லை. அவர் ஒருவேளை தன்னைப் படைத்த கடவுளையே தேடுகிறாரோ என்பது ஒருவரது ஏகத்தாள வாதம். ஆனால் டயோஜனீஸோ,

பன்னும் நூல்கள் விவரிக்கும்
பரனைக்காண ஆசையிலை
மன்னுத மாக்கள் உலகினிலே
மனிதன் தன்னைத் தேடுகின்றேன்

என்றல்லவா கூறுகிறார். ஏதோ உருவில் பலர் மனிதர்களாகத் தோன்றினாலும் உள்ளத்தால் அவர்கள் மனிதர்களாக இல்லையே. மருந்துக்குக்கூட. ஒரு மனிதன் அகப்படமாட்டேன் என்கிறானே இந்த உலகில், என்பது தான் டயோஜனீஸின் அங்கலாய்ப்பு.