பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

109

நினைத்தார்கள் போலும். பழைய வடிவிலே உள்ள அழகு புதியவடிவில் இல்லைதான்.

இந்தப் பிராகாரத்தின் தென்பக்கத்து வாயில் வழியாகத்தான் வேதநாயகியின் தனிக்கோயிலுக்குச் செல்லவேணும். எல்லாச் சிவன் கோயில்களும் அம்பிகை இறைவனின் இடப்புறம் இருக்க, இங்கு வலப்புறத்தில் இருக்கிறாள். மதுரையிலும் அப்படியே, அவிநாசி கருணாம்பிகையும் அப்படியே. இப்படி இடம் மாறிய காரணத்தால், இச்சந்நிதியில், சக்தியின் ஆதிக்கம் அதிகம் என்றும் தெரிகிறோம், நின்ற கோலத்தில் கம்பீரமாக நிற்கும் ஆரணவல்லியை வணங்கி வெளியில் வரலாம்.

இத்தலம் மாணிக்கவாசகர் பிறந்ததால் உயர்ந்தது என்று முன்னமேயே சொன்னேன். வாதவூரர் மன்னவன் விருப்பப்படியே அமைச்சர் பதவியேற்று, அவன் வேண்டிக் கொண்ட வண்ணமே கீழ்க்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றதும், அங்கு திருப்பெருந்துறையில் இறைவானால் ஆட்கொள்ளப்பட்டதும், பின்னர் மன்னன் வாதவுரை அழைத்துக்கேட்க, அவருக்காக இறைவனே நரிகளைப் பரிகளாக்கிக் கொள்வதும், பின்னர் அந்தப் பரிகளே நரிகளாகி ஓடிப்போய் விடுவதும் இதற்கெல்லாம் காரணம் வாதவூரரே என்று அவரைச் சிறையில் அடைப்பதும், அங்கு வைகையில் வெள்ளம் பெருகிவர அதை அடைக்க ஊரையே திரட்டுவதும், அங்கு வந்தியின் பங்குக்காக இறைவனே கூலியாளாக வந்து பாண்டிய மன்னனிடம் அடிபடுவதும், பின்னர் வாதவூரர் பெருமையை அறிவதும் இறைவனே நடத்திய திருவிளையாடல். இந்தத் திருவிளையாடல் விழா சிறப்பாக மதுரையில் நடைபெறுகிறது. வருஷந்தோறும் அவ்விழாவுக்கு, வாதவூரிலுள்ள மாணிக்கவாசகர் எழுந்தருளி நான்கு நாட்கள் அங்கு தங்கி அதன் பின்பே ஊர் திரும்புகிறார். வாதவூரராம் மாணிக்க வாசகருக்கு மற்ற மாணிக்கவாசகருக்கு இல்லாத சிறப்பு இருந்தாக வேண்டுமே. மார்கழி மாதம் முதல் பத்து நாட்கள், வாதவூரில் திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது. பத்து நாட்களும் மாணிக்கவாசகர் உலாவருவார்.