பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டமான்

125

குலமலை கோலமலை
குளிர் மாமலை கொற்றமலை
நீலமலை, நீண்டமலை
திருமாலிருஞ் சோலைமலை

என்று பெரியாழ்வார் பாடியிருக்கிறார்

திருமாலிருஞ் சோலை
என்றேன், என்னத்
திருமால் வந்து என் நெஞ்சு
நிறையப் புகுந்தான்

என்று நம்மாழ்வார் பாடுகின்றார்.

ஆழ்வார்கள் காலத்துக்கும் முந்திய பழம் பெருமை உடையது! இத்திருக்கோயில், சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் இங்குள்ள கண்ணன் பலராமன் கோயில் பேசப்படுகிறது. சங்க காலத்துக்குப் பிந்திய இலக்கியமான சிலப்பதிகாரத்திலும் இம்மலை. இம்மலை மேல் உள்ள திருமால், தீர்த்தங்கள் எல்லாம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இக்கோயிலை, மதுரையை ஆண்ட மலயத்துவஜன் கட்டினான் என்பது வரலாறு. பாண்டிய மன்னர் பலர் இக்கோயிலுக்குப் பலவகையான திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இக்கோயில் விமானத்துக்குப் பொன் வேய்ந்திருக்கிறான். பின்னர் விஜயநகர நாயக்க மன்னர்களின் பிரதிநிதியான விசுவநாத நாயக்கர் எவ்வளவோ திருப்பணிகளைச் செய்திருக்கிறார். இப்படியாக விரிவடைந்து புகழ் பெற்று நிற்கும் அழகனைத்தான் மக்கள் கள்ளழகன் என்கின்றனர். அந்த வட்டாரத்துக் கள்ளர் குல மக்களுக்கு தலைவன் என்பதால் அப்பெயர் பெற்றான் என்பர். எனக்குத் தோன்றுகிறது. இப்படிச் சொல்வது தவறு என்று. கோயிலுக்கு வருவோர் உள்ளங்களைக் கவர்ந்து கொள்ளும் கள்வனாக இருப்பதினால்தான் அவனைக் கள்ளழகன் என்று சொல்கிறார்கள் போலும்! நீங்களும் சென்று அவனால் களவாடப்பட்டு, உள்ளம் பறிகொடுத்துத் திரும்பினால் நான் ஒன்றும் அதிசயப்பட மாட்டேன்.