பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

போன்றவற்றில் ஒரு தனி ஆற்றல் ஏற்படச் செய்தது அந்த உறவே என்று சொல்வோமானால் தவறில்லை.

இப்படியாகப் பெற்ற நலன்களை எல்லாம் பேணிக் காத்து, வளர்த்துச் சீரிய முறையில் உலகிற்களிக்க உதவிய மற்றொன்றையும் நாம் மறத்தற்கில்லை. அதுதான் இளமையிலிருந்தே பல்வேறு இடங்களில் பணியாற்றிய காலங்களில் கிடைத்த ஓய்வையும், ஏற்படுத்திக் கொண்ட ஓய்வையும் தல யாத்திரைக்கும், இலக்கிய வரலாற்று சிற்பப் பணிக்குமே பயன்படுத்திக் கொண்ட அந்த ஆர்வம் இருக்கிறதே அதைத்தான் நாம் பாராட்ட வேண்டும். எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

"வேங்கடம் முதல் குமரிவரை" என்று பொதுத் தலைப்பு அமைத்துக் கொண்டதே ஓர் அருமை. பண்டைத் தமிழன் மரபுப்படி, பெயர் அமைந்திருக்கிறது என்று உவகை ஏற்படும் அதே காலத்தில், வாசகர்களை எல்லாம் தென்றிலின் இன்பத்தை அனுபவிக்கச் செய்வதைப் போல், தெற்கு நோக்கி அழைத்துச் செல்லும் அருமை எண்ணி எண்ணி மகிழக் கூடியதாக இருக்கிறது.

“வேங்கடம் முதல் குமரி வரை” தொகுதியில் நான்காம் பகுதி இது. இதில் 30 கட்டுரைகள் உள்ளன. இலக்கியப் பூங்கா ஒருபுறம்; சிற்பக் கலைக்கூடம் மறுபுறம்; ஆராய்ச்சிட் பட்டறை இன்னொரு புறம்; பக்திப் பஜனைக் கூடம் வேறொருபுறம்; வரலாற்றுக் கதைக் கூடம் பிறிதொரு புறம் என்று இப்படியாகப் பல்வேறு துறைகளையும் இந்தக் கட்டுரை உலகிலே காணலாம்.

அன்புடன், ஆர்வத்துடன், உள்ளே செல்லுவோம். விருப்பு வெறுட்பின்றி அணுகுவோம். அருமை பெருமைகளை நன்றாக அனுபவிப்போம். நம்மை எல்லாம் இட்டுச் செல்லும் சகோதரர் பாஸ்கரன் அவர்கள் நம்முடன் இருந்து தக்கபடி உதவுவார். இனியும் முன் வாயிலில் காத்துக் கொண்டிருப்பானேன்? வாருங்கள், உள்ளே நுழைவோம், வாழ்க பாஸ்கரன்; வளர்க அவர் பணி" என்று! வாழ்த்திக் கொண்டே!

கம்பன் அடிட்பொடி
சா. கணேசன்