பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21. பாபநாசத்துப் பாப விநாசர்

பஞ்சவடியிலே பர்ணசாலையில் இருந்த சீதையைச் சிறை எடுத்துச் சென்று விடுகிறான் இராவணன், சீதையைத் தேடி வரும் ராமலக்ஷமணரும் கிஷ்கிந்தை வந்து சேருகிறார்கள், ராமன் சக்ரீவனுக்குத் துணை நின்று வாலியை வதம் செய்கிறான்; சுக்ரீவனுக்குக் கிஷ்கிந்தை ராஜ்ய பாரத்தையே தருகிறான். அதன் பின் சீதை தேடும் படலம் தீவிரமாக ஆரம்பமாகிறது. வானரசேனை நான்கு திசைகளிலும் சென்று சீதையைத் தேடத் தொடங்குகிறது. அப்படிச் செல்லும் சேனா வீரரில் அனுமன் ஒருவன், அவனைத் தென்திசைக்கு அனுப்புகிறான் ராமன், அப்படி அவனை அனுப்பும்போது ஓர் எச்சரிக்கை செய்கிறான். 'தென்திசை நோக்கிச் செல்லும் நீ எங்கு வேண்டுமானாலும் போ. ஆனால் ஒரே ஒரு இடத்துக்கு மட்டும் போய்விடாதே, தெற்கே திருநெல்வேலி சீமையில் பொதியமலை இருக்கிறது. அங்கே அகத்தியர் இருந்து ஒரு தமிழ்ச் சங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். தப்பித் தவறி அப்பக்கம் போய் அங்கு அச்சங்கத்தில் நடக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு விட்டாயோ? போச்சு என் காரியம், தமிழ் என்றால் அத்தனை இனிமையுடைய மொழி. அதிலும் அகத்தியர் நடத்தும் தமிழ்ச் சங்கம் என்றால் கேட்கவா வேண்டும்? நீயும் அத்தமிழுக்கே அடிமையாகி என் காரியத்தை மறந்து விடுவாய் ஆதலால் அந்தப் பொதிய மலைப்பக்கம் மாத்திரம் போகாதே. அகத்தியர் நடத்தும் சங்கத்தில் நுழையாதே. அங்கு பாடப்படும் தமிழ்ப் பாடல்களுக்குச் செவி சாய்க்காதே' என்றான். இப்படி ராமன் அனுமனை எச்சரித்தான் என்பதெல்லாம் என் சொந்தக் கற்பனை அல்ல. கம்பன் சொல்கிற காரியந்தான். கம்பன் பாடுகிறான்: