பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

வேங்கடம் முதல் குமரி வரை

தென் தமிழ் நாட்டு

அகன்பொதியில் திருமுனிவன்
தமிழ்ச் சங்கம் சேர்கிற்றிரேல்

என்றும் அவண்

உறைவிடமாம், ஆதலால்
அம்மலையை இடத்திட்டு ஏகி

பொன்திணிந்த புனல்பெருகும்

பொருநை எனும் திருந்தியும்
பின்பு ஒழிய

அகன்று வளர்தடஞ்சாரல்

மயேந்திரமா நெடுவரையும்

கடலும் காண்பீர்

என்பது பாட்டு. இப்படிக் கம்பன் ராமன் மூலமாக எந்த இடத்துக்கு அனுமன் போகக் கூடாது என்று எச்சரிக்கிறானோ, அந்த இடத்துக்கே உங்களை அழைத்துச் செல்ல விரைகின்றேன் நான். ஆம்! இன்று நாம் அந்தப் பொதிய மலைக்கே செல்கிறோம். அங்கு அம்மலை அடிவாரத்தில் உள்ள பாபநாசத்துக்கே செல்கிறோம்.

பாபநாசம் என்னும் தலம் செல்லத் திருநெல்வேலி தென்காசி லயனில் உள்ள அம்பாசமுத்திரம் என்னும் ஸ்டேஷனில் இறங்கவேணும், அங்கிருந்து மேற்கு நோக்கி நான்கு மைல் செல்லவேண்டும். முதலில் விக்கிரமசிங்கபுரம் என்னும் ஊரைச் சென்று சேர்வோம். அதன் பின்னும் ஒரு மைல் நடந்தால் தாமிரபருணி நதிக் கரை வந்து சேர்வோம். அங்குதான் பாபவிநாசத்தராம் முக்களா லிங்கர் உலகம்மையுடன் கோயில் கொண்டிருக்கிறார். அவரைத் தரிசிக்குமுன் மலைமேல் ஏறி, பாபநாசம் அணைக்கட்டு, மின்சார நிலையம் எல்லாம் பார்த்து விடலாமே. அங்கெல்லாம் காரில் செல்லலாம். பஸ் வசதிகளும் உண்டு. 'அப்பர்டாம்' 'லோயர் டாம்' என்ற அணைக்கட்டுகளையெல்லாம் பார்த்துத் திரும்பும் வழியில் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கினால் அங்கு அகத்தியருக்கும் அவர் வழிபட்ட முருகனுக்கும் சிறு கோயில்கள் இருப்பதைக் காண்போம்.