பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

181

வேட்டு முலைப்பால் இமய
வெற்பரசி ஒக்கலைவைத்து
ஊட்டும் மகவே
உலகுடைய மாதாவே!

என்பது பாட்டு. ஆம்! ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. இத்தலத்தில் சித்திரை விஷூதான் சிறப்பான நாள். அன்றுதான் அகத்தியருக்குத் திருமணக் கோலத்தைக் காட்டியிருக்கிறார் இறைவன். இந்தப் பாடல் பாடிய நமச்சிவாய கவிராயர் நிரம்பக் கர்வம் வாய்ந்தவராக இருந்திருக்கிறார். அவர் கர்வம் அடைந்ததற்குக் காரணத்தையும் அவரே சொல்கிறார்.

பாரிலே நமக்கு ஒருவர் நிகரோ?
தென்றல் பருவத்தில் வரு
தாம்பர பருணி ஆற்று
நீரிலே மூழ்கி வினை ஒழித்தோம்,
சைவ நெறியிலே நின்று
நிலைபெற்றோம், சிங்கை
ஊரிலே குடியிருந்தோம்,
எமது கீர்த்தி உலகம் எலாம்
புகழந்து ஏத்த, உலகமாதின்
பேரிலே கவிதை எலாம் சொன்னோம்
பிறப்பில் எழுபிறப்பும் அறப்
பெறுகின்றோமே

ஆம்! நாமும் பாபநாசம் சென்று. தாமிரபருணியிலே நீராடி நமது பாவங்களெல்லாம் நாசமாகிப் போகும்படி செய்து கொள்ளலாம். உலசுமாதின் புகழைப் பாடிப்பாடிப் பரவி முக்தி பெறலாம்.

இக்கோயில் விக்ரம சிங்க பாண்டியன் மகனான கருணாகரப் பாண்டியன் காலத்தில் கட்டட்பட்டிருக்கிறது. அவனது புத்திரனான ராஜ ராஜ பாண்டியன் முதலியவர்களால் விரிவாக்கப் பட்டிருக்கிறது. கி.பி.13 ஆம் நூற்றாண்டிலே இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்க வேணும் என்று தெரிகிறது. அதற்குரிய கல்வெட்டுக்கள் பல இந்தக்கோயிலில் இருக்கின்றன.