பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

வேங்கடம் முதல் குமரி வரை

இப்படி ஒரு கதை. ஆனால் இவ்வளவும் உண்மையாய் நடக்க வில்லை. தமிழ்நாட்டுச் சிற்பி ஒருவன் ஒரு நாள் மாலை ஊருக்கு வெளியே உலாவப் புறப்படுகிறான். அங்கே ஒரு பாறையைப் பார்க்கிறான். அப்பாறையில் இயற்கையாகச் செந்நிற ரேகைகள் ஓடுவதைக் காண்கிறான். அந்தப் பாறையையும் அதில் ஓடிய செந்நிற ரேகைகளையும் சுற்றி சுற்றி அவன் எண்ணம் ஓடியிருக்கிறது. பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கையில் உடன் போக்கு` எல்லாம் உண்டு என்பதை அறிந்தவன் ஆயிற்றே. அதனால் அவனது எண்ணத்தில் ஒரு சுற்பனை. ஆம்! முன் கூறிய கற்பனைக் கனவு உருவாகியிருக்கிறது. அந்தப் பாறையை வெட்டிக் செதுக்கி அதில் தன் சிற்றுளி வேலையைக் காட்ட முனைகிறான். அவ்வளவுதான், கல்லில் உருவாகி விட்டார்கள் கன்னி, காதலன், சோழ நாட்டு வீரர்கள், அவர்களது குதிரைகள், அவர்கள் ஏந்திய ஈட்டிகள் எல்லாம். பாறையில் கண்ட சிவப்பு ரேகைகள் வீரனின் விலாவில் வடியும் ரத்தப்பெருக்காக அமைந்து விடுகின்றன. கல் உயிர் பெற்று விடுகிறது. இந்தச் சிலை வடிவை ஒரு தூனாக நிறுத்திவிடுகிறான் சிற்பி, கிருஷ்ணாபுரத்துத் திருவேங்கடநாதன் சந்நிதியில். அந்தக் கிருஷ்ணாபுரத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

கிருஷ்ணாபுரம் திருநெல்வேலியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில் உள்ள சிற்றூர். திருநெல்வேலி திருச்செந்தூர் ரோட்டில் சென்றால் நெடுஞ்சாலைப் பொறியர்கள் 'கிருஷ்ணாபுரம் கலைச் சிற்பங்கள்' என்று எழுதி ஒரு போர்டு. நாட்டிக் கோயிலுக்குச் செல்லும் வழியைக் குறிப்பிட்டிருப்பார்கள். ரயிலிலே செல்பவர்கள் செய்துங்க நல்லூர் (ஆம், செய்து உண்க நல்லூர் அல்ல, ஜெயதுங்கள் நல்லூர்தான்) ஸ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக் கொண்டு மேற்கு நோக்கி இரண்டு மைல் வரவேணும். அப்படி வந்த ரோட்டை விட்டு இறங்கி இரண்டு பர்லாங்கு பனந்தோப்பு வழியாக நடந்தால் திருவேங்கடநாதன் கோயில் வாயில் வந்து சேரலாம். இந்தத் திருவேங்கடநாதன் புராணப் பிரசித்தி, சரித்திரப் பிரசித்தி எல்லாம் பெற்றவர் அல்ல. ஆனால் இக்கோயில் ஒரு பெரிய சிற்பக்கலைக் கூடமாகவே இருக்கிறது.

கோயில் வாயிலில் ஒரு நல்ல கோபுரம். அந்தக்