பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

வேங்கடம் முதல் குமரி வரை

இத்தலத்தில் வராக நாராயணர் ஞானப் பிரானாக முனிவர்களுக்குக் காட்சி கொடுத்திருக்கிறார். அவரது சந்நிதி தெற்குப் பிராகாரத்தையொட்டிய மேடை மீது இருக்கிறது. இந்தக் குருகூரில், ஆதிநாதரைவிடட் பிரபலமானவர் நம்மாழ்வார்தான். ஆம்! ஊர்ப் பெயரே அவரால் மாறி விட்டதே. ஆழ்வாரது திருநகரியாகத்தானே இன்று விளங்குகிறது. இந்த ஆழ்வார் திருநகரிக் கோயிலிலே தம்மாழ்வார் இருந்த புளியமரமே தலவிருக்ஷம். நம்மாழ்வார் அமர்ந்திருந்த மரத்தின் பாகத்தில் தினமும் திருமஞ்சன வழிபாடு நடக்கிறது. ஒரே மரமாக இருந்த போதிலும் பொந்தாயிரம் புளியாயிரம் என்ற படி பல பொந்துகளோடுதான் விளங்குகிறது. இது ஏழு பிரிவாய்ப் பிரிந்த கோயில் விமானத்தில் எல்லாம் பரவி நிற்கிறது. இம்மரம் காய்த்த போதிலும் பழுக்காமல் பிஞ்சிலேயே உதிர்ந்துபோய் விடுகிறது. இத்தலத்தைச் சுற்றியுள்ள புளிய மரங்களிலும் பழம் பழுப்பதில்லை . இந்த மரத்தடியிலே தனிக்கோயிலிலேதான் நம்மாழ்வார் சிலை வடிவில் இருக்கிறார். நம்மாழ்வாரது பூத உடலைப் பள்ளிப்படுத்திய இடத்திலேதான் கோயில் அமைத்து ஆழ்வார் உருவைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இத்திருப்புளி ஆழ்வாரைச் சுற்றிய பீடத்தில் மதில் சுவர்களில் நூற்றியெட்டு திருப்பதிப் பெருமான்களும், கீழ் வரிசையில் ஆழ்வாராதியர்களும் அதன் கீழ் வரிசையில் யானை உருவங்களும் அமைக்கப் பட்டிருக்கின்றன. உத்சவ மூர்த்தமான ஆழ்வார் சோபன மண்டபத்துக்கு எதிரே உள்ள பொன் குறட்டில் எழுந்தருளியிருக்கிறார்.

மற்றைய ஆழ்வார்கள் எல்லாம் பெருமாளைப் பாட நம்மாழ்வாரது சிஷ்யராய் அமர்ந்த மதுரகவியாழ்வார் மட்டும் சடகோபனையே பாடியிருக்கிறார். 'கண்ணிநுண்சிறுத் தாம் பினால்' என்று தொடங்கும் பதினொரு பாடல்களும் நம்மாழ்வார் புகழையே பேசுகின்றன.

நன்மையால் மிக்க
நான்மறையாளர்கள்
புன்மையாகக்
கருதுவர் ஆதலின்,