பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

223

முன்னம் நின் அன்னை அமுதூட்டி
மையிட்டு முத்தமிட்டுக்
கன்னமும் கிள்ளிய நானல்லவே,
என்னைக் காத்தளிக்க
அன்னமும் மஞ்ஞையும் போல் இரு
பெண்கொண்ட ஆண்பிள்ளை நீ
இன்னமும் சின்னவன் தானோ
செந்தூரில் இருப்பவனே

என்பதுதான் பாட்டு, “அன்னமும் மஞ்ஞையும் போல் இரு” "பெண் கொண்ட ஆண்பிள்ளை அல்லவோ நீ” என்று ஆங்காரத்துடனேயே கேட்கிறான்: ஆறுமுகனை, இன்னமும் சின்னவன் தானோ என்று முடிக்கும்போது கவிஞனின் ஆத்திரம் அளவுகடந்தே போய் விடுகிறது. இப்படிப் படிக்காசுப் புலவன் நேருக்கு நேரே சண்முகனைக் கேட்ட தலம்தான் திருச்செந்தூர் என்னும் திருச்சீரலைவாய். அந்தத் திருச்செந்தூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருச்செந்தூர் திருதெல்வேலி ஜில்லாவில், திருநெல்வேலிக்குக் கிழக்கே முப்பத்தைந்து மைல் தொலைவில் இருக்கிறது. கடற்கரை ஆண்டியான செந்தில் ஆண்டவனைத் தரிசிப்பதற்கு முன் கடலாடிவிட வேண்டும் என்பர். கோயிலின் தென்புறத்தில் நல்ல வசதியாகக் கடலில் இறங்கி ஒரு முழுக்குப் போடலாம். அந்த முழுக்கால் உடலில் ஏறியுள்ள உப்பை, இன்னும் கொஞ்சம் தெற்கே நடந்து அங்குள்ள நாழிக் கிணற்றில் ஆம், நல்ல தண்ணீர் கிணற்றில்தான் குளித்துக் கழுவிக்கொள்ளலாம். திரும்பித் தென்பக்கம் வாயிலுக்கு வந்து சண்முக விலாசத்துக்குள் நுழைந்து கோயிலுள் செல்லலாம். முக்காணியர் என்ற அர்ச்சர்கள் உங்களை முதலில் சுப்பிரமணியன் சந்நிதிக்கே அழைத்துச் செல்வர். அவன்தானே அங்குள்ள மூலமூர்த்தி இந்தத் திருச்செந்தூர்தான் நக்கீரரது திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. மிகவும் பழமையான தலம் அல்லவா? பழைய சங்க இலக்கியமான புறநானூற்றிலேயே.