பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

245

கோலத்தோடு நிற்பான். வசதியும் காலில் சக்தியும் உள்ளவர்கள் இவனையும் தரிசித்துத் திரும்பலாம்.

இவ்வளவு சொல்லி விட்டீரே, அந்த வாமனனாய் குறுங்குடிக்கே பெயரளித்த குறுகிய வடிவினனது வடிவைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பது என் காதில் லிழுகிறது. அந்த வாமனர். கோயிலுக்குத் தெற்கே நாலு பர்லாங்கு தொலைவில் உள்ள சத்திரத்திலுள்ள சந்நிதியில் இருக்கிறார். ஏன் அவருக்குப் பிரதான கோயிலில் இடம் கொடுக்காமல் ஒதுக்கி வைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நாம் அவரையும் ஒதுக்காமல் அங்கும் சென்று வணங்கியே வீடு திரும்பலாம்.

குறுங்குடி நம்பியைப் பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் நால்வரும் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள். இந்நம்பியின் அனுக்கிரகத்தாலேயே நம்மாழ்வார் திரு அவதாரம் செய்தார் என்பது வரலாறு. திருவாலித் திருநகரியில் பிறந்து தலங்கள் சென்று பரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டுக்கு எழுந்தருளியிருக்கிறார். அவரது கோயில் வடகிழக்கே அரை மைல் தூரத்தில் இருக்கிறது.

கோயில் அமைப்பு, மண்டபம், சிற்பங்களை எல்லாம் பார்த்தால் விஜய நகர நாயக்க மன்னர்கள் காலத்தில் இக்கோயில் விரிவடைந்திருக்க வேணும் என்று தெரிகிறது. திருக் குறுங்குடி அழகிய நம்பி உலாவில் இருந்து உதயமார்த்தாண்டர் என்ற அரசர் தம் பெயரால் சமர்ப்பித்த பந்தலின் கீழாக, ராமதேவர் என்பவர் தம் பெயரால் அமைத்த தனிப் பீடத்திலே நம்பி எழுந்தருளியிருக்கிறார் என்று அறிகிறோம். உதய மார்த்தாண்டர் சேர மன்னனாக இருத்தல் வேண்டும். ஒரு தாமிர சாஸனம் மூலம் விஜயநகரத்து அரசர்களுள் வேங்கட தேவ மகாராஜர் என்பவரும் இக்கோயிலில் அரிய திருப்பணிகள் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. இவற்றையெல்லாம் ஆராய்ச்சிகளுக்கு விட்டுவிடுவோம். நாம், நம்பாடுவான் பாடிய நம்பியைத் தரிசித்து அதனால் அடையும் இன்பப் பேறுகளைப் பெற்ற திருப்தியோடேயே திரும்பி விடுவோம்.

வே.மு.கு.வ-17