பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

65

ஏதமொன்றும் இலா வண்கையினார்கள்
வாழ்திருக் கோட்டியூர்
நாதனை, நரசிங்கனை, நவின்று
ஏத்துவார்கள் உழக்கிய
பாததூளி படுதலால் இவ்
வுலகம் பாக்கியம் செய்ததே.

என்றும் பாடியிருக்கிறார். இத்தலத்துப் பெருமானை, பெரியாழ்வாரையும் மங்கை மன்னனையும் தவிர பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் மூவரும் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.

இக்கோயிலில் நிறையக் கல்வெட்டுகள் உண்டு. ராஜராஜசோழனது கல்வெட்டில், இக் கோயிலிலுள்ள சிவனைத் திருமயான தேவன் என்று குறிப்பிட்டிருக்கிறது. முதல் குலோத்துங்கள் காலத்தியக் கல்வெட்டு ஒன்றும், கீழைத் திருதலையில் இருக்கும் உரகமெல்லணையான் கோயிலில் நந்தா விளக்கு எரிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட நிபந்தமும் காணப்படுகின்றன. திருமயத்தில் உள்ள கல்வெட்டின் படி ஒன்றும் இங்கிருக்கிறது. அதன் படி நாராயண ஸ்ரீ குமாரபட்டர் என்பவர் இரண்டு கோவில்களுக்கும் உள்ள வழக்கை எப்படித் தீர்த்து வைத்தார் என்பதும் தெரிகிறது. இந்தப் பஞ்சாயத்துக்கு ஹொய்சல வீரசோமேசவரனின் பிரதிநிதி தலைமை வகித்தான் என்றும் அறிகிறோம். இந்தக் கல்வெட்டு சுந்தர பாண்டியனின் காலத்தியது. இதனாலெல்லாம் இக்கோயில் கி.பி. பத்தாம் நூற்றாண்டிலேயே பிரசித்தமாயிருந்திருக்கிறது என்பதையுமே உணர்கிறோம்.