பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. ராமேச்சுரத்து ராமலிங்கர்

சிவன் கோயில்களில் கருவறையில், கோயிலுக்கே நடுநாயகமாய் இருப்பது சிவலிங்கம். சிவலிங்க வழிபாடு மிகமிகப் பழமையானது. திருமூலர் தமது திருமந்திரத்தில் அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவ லிங்கம், சிவலிங்கம், ஆத்மலிங்கம், ஞானலிங்கம் முதலியவைகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

இலிங்கமதாவது யாரும் அறியார்
இலிங்கமதாலது எண்திசை எல்லாம்
இலிங்கமதாவது எண்ணெண் கலையும்
இலிங்கமதாவது எடுத்தது உலகே

என்பது திருமந்திர வாக்கு. பாதாளம் முதல் ஆகாச பர்யந்தம் எல்லையில்லாத அனந்த சொரூபமாகப் பிரகாசிப்பது லிங்கம். இதனையே 'ஆபாதால' என்ற தியான சுலோகம் கூறியே ருத்ராபிஷேகத்தைத் தொடங்க வேன்டும் என்பது விதி. அண்டமெல்லாம் நிறைந்து நிற்கும் இறைவனை அணுவிலே காட்ட முயன்றவன் கலைஞன், அருவுருவமான கடவுளை உருவத்திலும் அரு உருவத்தில் காட்டுவதில் வெற்றி பெற்றவன் அவன். அந்த அருஉருவத் திருமேனிபயே சிவலிங்க வடிவம், அதாவது வடிவம் போலவும் இருக்கும்; அதே சமயத்தில் வடிவம் ஒன்று இல்லாமலும் இருக்கும் நிலை. இந்த லிங்க வடிவினை அரசர்கள், முனிவர்கள், பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். முசுகுந்தன் பிரதிஷ்டை காளத்தியில், தொண்டைமான் சக்கரவர்த்தியின் பிரதிஷ்டை வட திருமுல்லைவாயிலில், இடும்பன் பிரதிஷ்டை இடும்பா வனத்தில். திரிசிரன் பிரதிஷ்டை திருச்சிராப்பள்ளியில். அகஸ்தியர் பிரதிஷ்டை அகஸ்தியன் பள்ளியில், மூன்று கோடி முனிவர்கள் சேர்ந்த பிரதிஷ்டை செய்தது கோடிகாலில், ஆனால் எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் வகையில் மூவர்க்கும் மேலான ராமனே பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கம்தான் ராமலிங்கம்.