பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வேங்கடம் முதல் குமரி வரை

என்பது ஐதீகம். கட்டிய புண்ணியம் எல்லாம் நம் வீடு வரையாவது நம்முடன் கொண்டுசெல்ல வேண்டும்.

ராமேசுவரத்தை விட்டு கிளம்புமுன் பார்க்க வேண்டியவை கந்தமாதன பர்வதம்; ஏகாந்த ராமர் கோயில், நம்பி நாயகி அம்மன் கோயில் முதலியன. கந்தமாதன பர்வதம் வடமேற்கே ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. இங்கிருந்துதான் இலங்கைக்கு அனுமார் தாவினார் என்று கூறப்படுகிறது. ஏகாந்த ராமர் கோயில் ராமேசுவரத்துக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் தங்கச்சி மடம் ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கிறது. இங்கு ராமர் சீதையுடன் பேசிக் கொண்டிருக்கும் பாவனையில் சிலைகள் அமைத்திருக்கிறார்கள். ராமர் இங்குதான் தமது மந்திராலோசனையை நடத்தினார் என்பர், ராமேசுவரத்துக்குத் தெற்கே இரண்டுமைல் தூரத்திலுள்ள நம்பி நாயகி அம்மன் நம்பிக்கையுடன் ஆராதிப்பவர்களுக்கெல்லாம் அருளுபவள் என்பது நம்பிக்கை, இன்னும் சீதா குண்டம், வில்லூரணி தீர்த்தம், கோதண்டராமசுவாமி கோயில் எல்லாம் சென்று வாங்கித் திரும்பலாம்.

இந்தத் தலத்துக்கு ஞானசம்பந்தரும், அப்பரும் வந்திருக்கிறார்கள்; பதிகங்கள் பாடியிருக்கிறார்கள்.

தேவியை வவ்விய தென்னிலங்கை
யரையன்
ஏவியல் வெஞ்சிலையண்ணல் செய்த
இராமேச்சுரத்தாரை
நாவியல் ஞானசம்பந்தன்
நல்லமொழியால் நவின்றேத்தும்
பாவியல் மாலை வல்லார்
அவர் தம் வினையாயின பற்றறுமே

என்று சம்பந்தர் பாடினால்,

கடலிடை மலைகள் தம்மால்
அடைத்து மால் கருமம் முற்றி
திடலிடைச் செய்த கோயில்
திரு இராமேச்சுரம்