பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

103

முருகனையும் - சண்முகனையும் வணங்கி விட்டு உட்பிராகாரத்தைச் சுற்றினால், ஈசான்ய மூலையில் ஒரு கம்பீரமான வடிவம் நிற்கும். எட்ட இருந்து பார்த்தால் அதுவும் முருகனோ என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் அது சிவனது பைரவ மூர்த்தம் என்பார்கள். அதற்குரிய சுணங்கள் அங்கிருக்க மாட்டான். இந்த பைரவன் மிக்க வரசித்தி உடையவராம். அதனால் அவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

மேலும் அவரே அக்கோயிலின் பிரதான நிர்வாகி, சந்நிதி வாயில்களை எல்லாம் பூட்டி, சாவியை அவர் முன்பு கொண்டு போய் வைத்து விடுவார்கள். அதன் பின் கோயிலையும் அங்குள்ள சொத்துகளையும் கண்காணிப்பது அவருடைய பொறுப்பு. கோயிலை விட்டு வெளியே வரும்போது ஒரு சிறு மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் திருமலைக் குமரனின் செப்புப் படிமத்தையும் பார்த்து விட வேண்டும். ஒன்றரை அடி உயரமே உள்ள வடிவம்தான் என்றாலும் மிக்க அழகான வடிவம் - இங்கு கோயிலுக்கு ராஜ கோபுரம் கிடையாது. முருகனும் பால்ய வயதே உடையவன் ஆனதால் வள்ளி தெய்வயானை சந்நிதிகளும் கிடையாது.

திருமலை முருகன் நல்ல இலக்கிய ரஸிகன் என்று தெரிகிறது. அவனைத் தனது திருப்புகழ் பாக்களில் அருணகிரியார் பாடி இருக்கிறார்.

எனது உயிர்க்கு உயிர் ஒத்த நவநீதா
சிவாகப் பரமற்கு இளையோனே
தினை வனத் தெரிவைக்கு உரியோனே
திருமலைக் குமரப் பெருமானே

என்பது பாடல். எனக்கு அருணகிரியார் பேரில் பொல்லாத் கோபம் வருகிறது. அவன் வள்ளியைக் கண்ணெடுத்தும் பாராத இளவயதினன் என்றாலும்