சமய குரவரில் ஒருவரான சுந்தரர் திரு நாவலூரிலே பிறக்கிறார். அவரை இறைவன் திருவெண்ணெய் நல்லூருக்கு அழைத்துச் சென்று அற்புதப் பழைய ஆவணம் காட்டி ஆட்கொள்கிறார். அவரைத் தம்பிரான் தோழன் என்றே அழைக்கிறார். அன்று முதல் சுந்தரரும் இறைவனோடு தோழமை பூண்டு, எண்ணற்ற அரிய காரியங்களைச் செய்ய இறைவனையே ஏவலாளனாகக் கொள்கிறார்.
இந்தத் தம்பிரான் தோழரின் இன்னொரு தோழர் சேர மன்னனாகிய சேரமான் பெருமாள் என்னும் திருத்தொண்டர். இவரும் சிவத்தொண்டில் ஈடுபட்டவர் சேர நாட்டிற்குத் தன் தோழனாகிய சுந்தரரைப் பலமுறை அழைத்திருக்கிறார். கடைசியாகச் சுந்தரரும் இணங்கி தன் மலைநாட்டுத் தலயாத்திரையைத் துவக்குகிறார். இதனைச் சொல்கிறார், திருத்தொண்டர் பெரிய புராணம் பாடிய சேக்கிழார்,
ஆரம் உரகம் அணிந்த பிரான்
அன்பர் அணுக்க வன் தொண்டர்
ஈர மதுவார் மலர்ச் சோலை
எழில் ஆரூமில் இருக்கும் நான்
சேரர் பெருமான் தனை நினைந்து
தெய்வப் பெருமான் கழல் வணங்கி
சாரல் மலைநாடு அடைவதற்குத்
தவிரா விருப்பின் உடன் போந்தார் -