பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

131

1943ம் வருஷம் ஜனவரி மாதம் 7ந் தேதி வியாழக்கிழமை, இந்த சாயிபாபா சந்நிதியில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. பஜனை ஆரம்பமாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னே எங்கிருந்தோ ஒரு பெரிய நாகம் ஒன்று ஊர்ந்து வந்தது. சாயிபாபா படத்தை வலம் வந்தது. பின்னர் தன் படத்தை விரித்து ஆட ஆரம்பித்தது. அந்த நாகத்தின் படத்தில் சங்கு சக்கரங்கள் திரிபுண்டரம் முதலிய சின்னங்கள் அழகாக இருந்தன. அந்த நாகம் அப்படி ஆடிக் கொண்டிருந்ததைக் கண்ட ஒரு சில பக்தர்கள் மற்றவர்களுக்கு சொன்னார்கள். ஆணும் பெண்ணும் பிள்ளைகளுமாய் பலர் கூடிவிட்டனர். மலர் கொண்டு வந்து நாகராஜன் பேரிலும் சாயிபாப படத்தின் பேரிலும் அர்ச்சித்தனர்.

அந்த நாகமும் பலமணி நேரம் ஆனந்த பரவச நிலையில் ஆடிக் கொண்டிருந்து விட்டு பின்னர் தன்னை சுற்றியிருந்த மலர்க் குவியல்களிலிருந்து விடுபட்டு எங்கோ சென்று மறைந்துவிட்டது. இந்த அதிசயத்தைக் கண்ட பின்தான், அந்த பர்ணசாலையை ஒரு பெரிய கோயிலாகவே கட்ட வேண்டும், என பக்தர்கள் முனைந்தனர். கட்டியும் முடித்தனர். ஒரு பெரிய படம் ஒன்றையும் எழுதிவைத்தனர். பூசைகளையும் தொடர்ந்து நடத்துகின்றனர். இப்படி உருவானதே கோவை நாகசாயி மந்திர்.

இந்த மந்திரில் இன்று ஒவ்வொரு வியாழக்கிழமையும், ஞாயிற்றுகிழமையும் எண்ணிறந்த பக்தர்கள் கூடுகின்றனர்; வணங்குகின்றனர். பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். அந்தப் பிரார்த்தனைகளும் அப்போதைக்கு அப்போதே நிறைவேற்றி வைக்கவும் பெறுகின்றனர். நான் கடவுள் நம்பிக்கை உடையவன். சைவனாய் பிறந்திருந்தாலும் சிவனிடம் எவ்வளவு பக்தியோ அதில் குறையாத பக்தியே விஷ்ணுவிடத்தும் வைத்திருப்பவன்.