16
வேட்டை நாய்
அன்று முதல் ஸெதாந்தா அவனுடைய மாமாவின் பிள்ளைகளுடன் காலையிலும் மாலையிலும், ஹாக்கி விளையாட ஆரம்பித்தான். ஒரு வாரத்துக்குள், அவன் ஹாக்கி விளையாடுவதில் பெரிய நிபுணனாகி விட்டான்! அவன் ஆட்டத்தைப் பார்த்தவர்களெல்லாம் அவனை வாயார வாழ்த்தினார்கள்; மனமாரப் போற்றினர்கள்.
ஃஃஃ
அன்று மாலை நேரம். அரண்மனை வாயிலில் அழகான இரு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வண்டி நின்று கொண்டிருந்தது. அரண்மனைக்குள்ளிருந்து, அந்த வண்டியை நோக்கி அரசரும், அவருடன் கூட ஒரு பிரபுவும் வந்தார்கள்.
வண்டியை நெருங்கியதும் “அரசே, தாங்கள் முதலில் ஏறி அமருங்கள்” என்று பணிவுடன் கூறினார் பிரபு.
அரசர் வண்டியில் ஏறினார். பிறகு பிரபுவும் ஏறிக் கொண்டார். வண்டி புறப்பட்டது.
அரசரின் பக்கத்திலே இருந்த பிரபு, ஒரு சாதாரணப் பிரபு அல்ல; அந்தத் தலைநகரிலே அவர் தான் மிகவும் பெரிய பிரபு. அவருடைய பங்களாவில் அரசருக்காக ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்துக்காகத் தான் அரசரை அவர் அழைத்துக்கொண்டு போனார்.
வண்டி சிறிது தூரம் சென்றிருக்கும். அப்போது பக்கத்து மைதானத்தில் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் கூட்டத்தைக்