பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

வேண்டும் விடுதலை

எனவே இம்மாநாடுகளில் விடுதலை மறவர்கள், புரட்சி யேறுகள், உரிமை அரிமாக்கள் எவரும் தப்பாமல் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் கோரிக்கை!

கோரிக்கை விட்டு விடுதலைப் போராட்டத்திற்கு அழைப்பதே எனக்கு நகைப்பைத் தருகின்ற செயல்!

இருப்பினும் என் செய்வது?

உறங்குகின்ற நம் மக்களை உலுப்பி எழுப்பி, உணர்வேற்றி, முதுகுக் கூனை நிமிர்த்தித்தானே அழைத்துக் கொண்டு போக வேண்டியுள்ளது!

ஏளனக்காரர்கள், எக்களிப்புப் பேசுவோர், மெத்தனம் பாராட்டுவோர், புறக்கணிப்பாக நடந்துகொள்வோர், பொதுத் தொண்டால் வரும் ஊதியங்களைத் தம் தீனிப் பைகளிலேயே கொட்டிக் கொள்வோர் - அனைவரும் ஏமாறிப் போகும் காலம் பெருமூச்செரியும் நேரம் - வயிறு வீங்கி, வெடித்துச் சாகும் ஒருநாள் - வரத்தான் போகிறது.

எனவே அவர்களின் மாற்றத்திற்காக நாம் காத்திருக்க வேண்டா. நமக்குரியவேலைகள் எத்தனையோ நமக்காகக் காத்துக்கிடக்கின்றன. கடமைகள் எதிர்நிற்கின்றன. அவற்றை நோக்கியே நாம் ஒவ்வொருவரும் பாடாற்றியாகல் வேண்டும். -

அதுவரை. நீங்கள் சோர்ந்து போகவே கூடாது!
புறப்படுங்கள் மதுரைக்கு!

பாண்டியன் கழகம் வளர்த்த வெறும் மதுரையாக இஃது இருந்தது போதும்! தமிழக விடுதலைக்குக் களம் அமைத்த மதுரையாக வரலாற்றில் இதைப் பேச வைப்போம்: புகழச் செய்வோம்; புறப்படுங்கள்!

குடும்பம் குடும்பமாக - கூட்டம் கூட்டமாக
நண்பர்களோடு - மனைவி மக்களோடு
வாருங்கள்!

உங்கள் முகங்களை அந்த விடுதலைப் போர்க்களத்தில் பார்க்கத் துடிக்கின்றேன்!

தவறாமல் வாருங்கள்!!

- தீச்சுடர், 1973