பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

வேண்டும் விடுதலை

அறிவெல்லாம் நம் மூளைகளினின்று போய்விட்டதென்றோ எவரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டா.

ஆரவாரத்தை விரும்புவர்கள் அறிஞர்களிலும் உண்டு; அறிவற்றவர்களிலும் உண்டு. இன்னுஞ் சொன்னால் அறிவியலறிஞர்களிலேயே போலிகள் உளர். போலி நிலைகள் எங்கும் உண்டு. தென்மொழி இயக்கமும் அதற்கு விலக்கில்லை. எனவேதான் மாநாடு தொடங்குவதற்கு முன் வீரதீரம் பேசிய சிலர் ஊர்வலம் தொடங்குகையில் கொஞ்சம் மனந்தொய்ந்து காணப்பட்டனர். அவர்கள் காவலர்கள் கூட்டத்தை வளைத்த உடனேயே தப்பி விட்டனர். இனி, ஊர்வலம் தொடங்குகையில் வீறர்ப்புக் காட்டிய சிலர் காவலர்கள் வந்தவுடன் மனம் நெகிழ்ந்து போயினர். அவர்கள் தாம் தளைப்பட்டவுடன் காவல் நிலையத்தில் கழன்று கொண்டவர்கள். அவர்கள் எத்தனையோ கரணியங்களைச் சொல்லலாம். அக் கரணியங்களை அவர்கள் முன்பே கருதாமல் ஊர்வலத்திற்கு வந்திருந்து நம் கூட்டத்திலும் அத்தகையோர் உளர் என்று காட்டி இழிவு தேடித் தந்திருக்க வேண்டா என்பதே நாம் அவர்களுக்குப் பணிவுடன் தெரிவித்துக் கொள்வது, இனி, அத்தகையவர்களை நாம் முன்பே இனங்கண்டு கொள்ள முடியாது. “எனைவகையான் தேறியக் கண்ணும், வினைவகையான் வேறாகும் மாந்தர் ‘சிலர்’ இல்லை, 'பலர்'... என்பது திருக்குறளின் தெளிவுரை. ஆனாலும் நாம் அவர்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டுவதில்லை. அவர்களை வலிவற்றவர்கள் என்றோ தெளிவற்றவர்கள் என்றோ கருதவேண்டுவதும் இல்லை. அவர்கள் ஒருவகையினர்; அத்தகையினர் என்றும் நம்மோடு நாமாகக் கலந்து இருந்து கொண்டுதான் இருப்பர்; அவர்களை விலக்க முடியாது. வேண்டுமானால் சில பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்காமல் நாம் தப்பித்துக் கொள்ள முடியும். அந்த நிலைகளை இம்மாநாட்டு நிலைகள் பலருக்கும் உணர்த்தியிருக்க முடியும் என்றே நாம் கருதுகின்றோம்.

மீண்டும் சொல்கின்றோம் நாட்டு விடுதலை முயற்சிகள் என்பது எளிதன்று உயிர் துறக்கும் முயற்சியாகும். ஈக வரலாற்றின் இறுதிப் படலமே விடுதலைப் படலம் கோழைகள் விடுதலை வரலாற்றை என்றும் எழுதியதில்லை; எழுதவும் முடியாது. துணிவு: துணிவு: துணிவு! அதுதான் விடுதலை இயக்கத்தின் கொள்கை மந்திரம் இதை நன்கு விளங்கிக் கொண்டவர்களைப் பொறுக்குவதற்குத்தான் திருச்சி மாநாட்டில் மூன்று கட்டத் தீர்மானம் நிறைவேற்றப் பெற்றது.