பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வேண்டும் விடுதலை

“குப்பைக்கீரையை உப்பின்றி உனக்கி ஒருநாள் ஒருபொழுது’’ உண்டதாக இலக்கியங்கள் பேசுகின்றன.

இற்றைத் தமிழகத்திலும் மாந்தர் பசியைப் பற்றிப் பேசுகின்றனர். ஆனால் அதற்கொரு வழியும் காணவில்லை. ஒழுக்கத்தைப் பற்றியும், பண்பாடு பற்றியும் பேசிப்பேசிக் காற்று மண்டலத்தை கூற்று மண்டலமாக்குகின்றனர். ஆனால் அவ்வாறு நடப்போரையும் நடந்து காட்டுவாரையும் காணோம். ஆகலின் மக்கள் என்று பண்பாட்டில் சிறந்து விளங்குகின்றனரோ, அன்றே ஆட்சியும் நெறியிற் சிறந்து விளங்க இயலும். கற்றால் மட்டும் போதாது; கற்றவாறு நிற்கவும் மக்கள் பழகல் வேண்டும். இதுபற்றியே வள்ளுவர் ஒழுக்கம், பண்பு என்று முழங்குகின்றார்.

இன்று தமிழகங் காண்கின்ற நிலையில் மக்கள் செய்ய வேண்டுவனவும் ஆள்நர் செய்ய வேண்டுவனவும் நிறைய உள. இருவரும் முறையாக அவற்றைக் கடைப்பிடியாய் நின்றாற்று வாராயின் நம் தமிழகம் விரைந்து முன்னேறும். மக்கட்பிரிவும் சமயப்பிரிவும் அவற்றை வளர்க்கும் கொள்கையும், சட்டமும் உடனே நீக்கப்படல் வேண்டும். வெற்று ஆரவாரச் சிறுத்தொழில்களையும் பெருந் தொழில்களையும் தடைப்படுத்தி நாட்டை ஒரு உழவு நாடாக முதலில் அமைத்தல் வேண்டும். கைத்தொழில் நாடாகவும் உழவு நாடாகவும் ஒருங்கே ஆக்கி விடுதல் என்பது எவ்வாற்றானும் இயலாததொன்று, ஒரு கைத்தொழில் நாட்டிற்கு மிகுந்த பொருள் தேவை; உழவு நாட்டிற்கோ, மிகுந்த உழைப்புத் தேவை. நம்நாடு பொருளற்ற, நாடு மக்கட் பெருக்கம் மிகுந்த நாடாகிய இஃது உழைக்க முற்படுமானால் பொருள் தானே குவியும், மக்கள் ஒருங்கே இருந்து உழைக்கத் தடையாயிருப்பன சாதிகளும் சமயங்களும். ஆதலின் அவற்றை முதலில் ஒழுங்கு செய்து கொள்ளல் அரசின் தலையாய கடமை

இவ்வாறு, அரசினர் செய்யும் நல்வினைகட்கு மக்கள் எல்லாவற்றானும் துணையாக நிற்றல் வேண்டும். இவ்வாறன்றி இந் நாவலந் தீவையோ, தமிழகத்தையோ முன்னேற்றிவிட வேண்டுமென்று முனைவோர் நெல் குற்றிக் கைசலிப்பாரே ஆவர் என்பதை மீண்டும் கூறுகின்றோம்.

- தென்மொழி, இயல் : 1, இசை 5, 1959