பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

161

தலைமையில் தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திரனார் ஆற்றிய சொற்பொழிவு:

பேரன்புக்கும் பெருமதிப்பிற்குரிய தலைவர் அவர்களே! வணக்கத்திற்குரிய பாவாணர் அவர்களே! அறிவியல் முனைவர் கோ. து. அவர்களே! மற்றும் இங்குக் கூடியிருக்கும் பேராசிரியப் பெருமக்களே! புலவர் பெருமக்களே! தமிழன்பர்களே! தாய்மார்களே! உங்கள் அனைவர்க்கும் என் பணிவான வணக்கம்.

இந்த மாநாடு தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கு என்ற பெயரிலே கூடியிருக்கின்றது. இது மிகவும் தேவையான ஒரு மாநாடாக இருந்தாலும் கூட, இந்த மாநாட்டு நடைமுறைகளும் இதனுடைய முடிவான கருத்து அறிவிப்பும் பெரிதும் வருத்தத்திற்குரிய செய்தியாக எனக்குப் படுகின்றது. ஏனென்றால் கடந்த காலத்திலெல்லாம். யாரையோ ஒருவனைப் பார்த்து அவன் எங்கிருந்தோ வந்தவன் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் நாம். ஏதோ மழைக்காக இருளுக்காக அஞ்சி, நம்முடைய திண்ணையிலே வெளிப்புறத்திலே வந்து ஒன்ற வந்தவன் போலிருந்து அத்திண்ணையிலே கொஞ்சம் இடம் கேட்டு உட்கார்ந்து கொண்டு இப்பொழுது, வீட்டிலுள்ள நம்மைப் பார்த்து, “இந்த வீடு எனக்குச் சொந்தமா? உனக்குச் சொந்தமா? உனக்குச் சொந்தமில்லை, நீ வெளியிலே வா ஒரு வேளை நான் இதற்குச் சொற்தமாக இருப்பேன் த என்று சொல்லக்கூடிய அளவிலே,” சொல்லுகிறது போலவும் நாம் இல்லை, எங்களுக்குத்தான் சொந்தம்” என்று தருக்கமிட்டுக் கொண்டு இருப்பது போலவும் ஆகிய ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. இம் மாநாடு.

“தமிழ் தன்னுடைய நிலையிலே வளர வேண்டும், அதற்குரிய பெருமையைப் பெற வேண்டும்” என்று போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே "தமிழ் எங்குப் பிறந்தது? தமிழன் எங்குப் பிறந்தான்?” என்று ஆய்கின்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறோம். தமிழனுடைய பிறந்தகம் இதுதான் என்பதிலே ஒரு சிறிதும் ஐயமில்லாமல் இருந்த அந்த நிலைபோய், இப்பொழுது ‘தமிழனும் வேறு எங்கோ இருந்து இங்கு வந்தவன்’ என்று சொல்லக் கூடிய ஒரு கருத்தும் அப்படியில்லை: இங்குதான் இருந்தான்; இதுதான் அவனுடைய பிறந்தகம்” என்று நாம் எதிர்த்துச் சொல்லக் கூடிய ஒரு நிலையும் நமக்கு உண்டாகியிருப்பது, மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு செய்தி.