பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

163

நமக்கு இருக்க வேண்டிய உரிமைகளை நாமே பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். . இளைஞர்களும் சேர்ந்து வாயளவிலே, அல்லது நூலளவில் இத்தகைய கருத்துகளுக்காகச் சொற் போராட்டங்கள் நிகழ்த்திக் கொண்டிருப்பது நம் ஆற்றல்களையும் காலத்தையும் வீணடிக்கின்ற செயலாகவே எனக்குப் படுகின்றது. எனவேதான் என்னுடைய நோக்கும், போக்கும் வேறு அளவிலே விரைவிலே இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் தமிழகத்தை எப்படியாகிலும் வடநாட்டார் ஆளுகையினின்று பிரித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு எந்த வகையான நன்மையும் ஏற்படப் போவதில்லை என்ற அளவிலே போய்க் கொண்டிருக்கின்றன. (பெருத்த கையொலி) மற்றபடி, இப்படிப்பட்ட கருத்துப் போராட்டங்களை நாம் நடத்தி நடத்தி, நம்முடைய கருத்துகளுக்கு நேர் எதிரிடையான கருத்துகள் வடநாடுகளிலும், வெளிநாடுகளிலும் எதிரிகளால் பரப்பட்டு வருகின்ற அந்த நிலைகளை நாம் தடுத்து நிறுத்திவிட முடியாது. நமக்குள்ள அடிப்படை உரிமைகளை மொழி, இனம், நாடு என்ற மூவகை நிலைகளிலும் நமக்குள்ள உரிமைகளை நாம் பெற்றாலொழிய, நாம் எத்தகைய மாநாடுகள் கூட்டி, எவ்வளவு வலிவான உண்மையான கருத்துகளைச் சான்றுடன் நிறுவினாலும் அவற்றிற்கு வெற்றிகிட்டப் போவதே இல்லை. இவற்றுக்குச் செயலளவில் நாம் ஒரு முடிவு கட்டியாக வேண்டும். இது தான் என்னுடைய முடிவான கருத்து. பாவாணர் அவர்கள் பேசச் சொன்னதற்காக இதையும் இங்குச் சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.

மற்றபடி, தமிழனுடைய பிறந்தகம் குமரிக் கண்டந்தான் என்று அவனுக்குப் பன்னிப் பன்னிச் சொன்னாலும், அவன் ஆளுகையில் நாம் உள்ளவரை, மாறான அதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. இக் கருத்துக்கு வலிவான சான்றுகளைப் பாவாணர் அவர்கள் தம் நூல்கள் எல்லாவற்றிலும் பல இடங்களிலும் காட்டியிருக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் அவற்றையே சொல்லிக் கொண்டிருப்பதில் நமக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே இந்த வகையில் கருத்துப் போராட்டத்தைவிடக் கைப் போராட்டமே நாம் செய்ய வேண்டுவது என்று கூறி முடித்துக் கொள்கின்றேன் வணக்கம்.

- தென்மொழி, சுவடி :11, ஓலை 4, 5, 1974