பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

165


 
மூன்றாம் விடுதலை மாநாடு!
சென்னைக்கு வாருங்கள்!


சூழ்நிலைகள் நிகழ்ச்சிகளுக்கு உயிரூட்டுகின்றன! நிகழ்ச்சிகள் சூழ்நிலைகளுக்குப் பெருமை தருகின்றன!
தில்லிப் பேரரசு இந்தியக் குடிமக்களின் அடிப்படை
உரிமைகளுக்கு விலங்குகள் பூட்டியுள்ள நேரம் இது!
எங்கு - எந்தப் பொழுதில் உரிமைகள் தடுக்கப்
படுகின்றனவோ, அது அந்தப் பொழுதுதான்.
அவ்வுரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய
சரியான இடம் பொருத்தமான நேரம்!
மற்ற இடங்களில் - நேரங்களில் உரிமைகள்
கேட்கப் பெறுவதற்குச் சரியான மதிப்பும் இல்லை!
அதற்கான தேவையும் இல்லை.

உரிமைகள் தரப் பெறுவதில்லை! அப்படித் தரப்பெறும்
உரிமைகளுக்கு உயிரூட்டமும், இருப்பதில்லை!
உரிமைகள் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்ளப்
பெறவேண்டியவை! அப்பொழுதுதான் அவை
மதிக்கப்பெறும் காக்கப்பெறும் மாந்தனின் இயற்கை
வளர்ச்சிக்கேற்றத் துணையாகக் கருதப் பெறும்!
தரப்பெற்ற உரிமைகள் தாமே விளைந்த புல்லரிசிகள்!
எடுத்துக் கொள்ளப் பெற்ற உரிமைகள் வெயிலொடு,
புயலொடு போராடி விளைவித்த நெல்லரிசிகள்!