பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

வேண்டும் விடுதலை

இனி, கொள்கையிலும் சில நெகிழ்ச்சிகள் இருக்கலாம் என்பவர்களும் சிலர் உண்டு. அந்த நெகிழ்ச்சி நிலைகள் முற்றும் அவர்களைப் பொறுத்த செய்தி. அந்த நிலையே பிறர்க்கும் இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும், அதற்கு இயைபாக நானும் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டியங் கூறிப் பேசுவதும் எனக்கு ஒத்துவராத செய்திகள். எனவே, ஒத்துப் போகாத ஒன்றை எதனுடைய அடிப்படையில் என்று கவனிக்க வேண்டுமே தவிர, எட்டா முட்டித்தனமாக அஃது எல்லா நிலையிலும் இருக்க வேண்டும் என்று முரண்டு பிடிப்பது. அறியாமையும் வினைப்பிதுக்கமும் ஆகும். அறிவுடைமையும் வினைத்திறமும் ஆகாது.

இனி, இறுதியாகக் கடந்த விடுதலை மாநாட்டினின்று நான் தெரிந்துகொண்ட உண்மைகள் ஒரு சில உண்டு. அவற்றுள் ஒன்று. இக்கால், தமிழக விடுதலையை எவரும் அறிவு நிலையாகவோ, உணர்வு நிலையாகவோ விரும்பவில்லை; இயக்க நிலையாகவே விரும்புகின்றனர் என்பதே. அப்படி விரும்புகின்றவர்களும் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள விழைபவர்களாவே இருக்கின்றனர். வெறும் விளம்பரத்திற்காகவோ, புகழுக்காகவோ, விடுதலையை விரும்புகின்ற நெஞ்சங்கள், அவை வாய்க்காத விடத்து, அவ்விடுதலையையும் தவிர்க்கின்ற உணர்வு கொள்பவையாகத் தான் இருக்க முடியும். விடுதலையை ஓர் உயிராகக் நிலையாக விரும்புகின்றவன் எவனோ, அவன் முதலில் தன்னை எல்லாவகைத் தளைகளினின்றும் கட்டறுத்துக் கொள்ளுபவனாக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும். அந்நிலையே தான் மன நிறைவுடன் ஒப்புக்கொண்ட கொள்கைக்கும் கட்டுப்பட்டு நடக்கும் மனப் பாங்கை வளர்த்துக்கொள்ளப் பயன்படுவதாகும். அம்மனப் பாங்கு வளரும் வரை தமிழினத்தை எவராலும் ஒன்றுபடுத்திவிட முடியாது. தமிழக விடுதலையும் எட்டாத ஒரு கனவாகவே போய்விடும் என்று எச்சரிகை விரும்புகின்றேன்.

இனி, கொள்கைமேல் நம்பிக்கை வைத்துள்ள நம் விடுதலை இயக்க மெய்யன்பர்கள் தொடர்பாகவும், அவர்கள் இனிநடந்து கொள் வேண்டிய வினைகள் தொடர்பாகவும் அடுத்து வரும் இதழ்களில் பேசுவோம்.

- தென்மொழி, சுவடி :12, ஓலை 10, 1975