பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வேண்டும் விடுதலை

அடிப்படையாகுமன்றி, அதனைத் தடுத்து நிறுத்தும் முயற்சிக்குக் கட்டாயம் வழி வகுக்காது.

குடியரசு அமைப்பு முறையின் முழு முதல் அடிப்படைச் சிறப்பு என்ன வென்றால், எல்லாக் குடிமக்களின் அன்றிக் குடிமக்களில் ஒருசிலரின் அவ்வப்பொழுதைய உரிமைக் குரலுக்குக் செவி சாய்ப்பதே ஆகும். அவ்வுரிமைக் குரல் எழுப்பப்படுகையில் அதற்குச் சரியான வகையில் அமைவு கூறி அதனைத் தணிக்க முயல்வதே குடியரசு முறையைக் கட்டிக்காக்க விரும்புவார் செய்ய வேண்டிய செயலாம். அஃதன்றிக் குடிமக்கள் சிலரால் எழுப்பப் பெறும் உரிமை வேட்கையின் குரல்வளையை அழுத்தி நெரித்து அக்குரலெழாமல் தடுக்கும் குடியரசை விட, தன் விருப்பம் போல் மக்களை அலைக்கழித்து அச்சுறத்தித், தன் வலிந்த கைகளால் குரலெழுப்பும் மக்களைத் தடுத்து வன்மம் புரியும் முடியரசே நூறு மடங்கு மேலாம்.

இந்தியப் பேராயக் கட்சியின் ஆளுநர், அண்டை நாட்டாரொடு எல்லைப் போரிட்டுக் கொண்டிருக்கும் இதே பொழுதில் எவ்வகையிலும் தமக்குத் தொல்லை தராத - மாறாகத் துணை புரிகின்ற ஒரு சார் மக்கள், தாம் பின்னர் எழுப்பப் போவதாகக் கூறும் விடுதலைக் குரலுக்கு அணையிட முயன்று, அவர் தம் வெறுப்புக்கும் பகைக்கும் ஆளாகின், அந்நிலை எத்துணைப் பெருந் தீங்கை விளைவிக்கும் என்று நாம் கூறற்கியலாது.

இப்பொது நிலைகளை ஒருவாறு விடுத்துப் பிரிவினைக்குரிய சிறப்பு நிலைகளை ஒரு சிறிது பார்ப்போம்.

இந்திய அரசினர் இப்பிரிவினைத் தடைச் சட்டத்தை விரைந்து கொண்டுவரும் இந்நிலைக்குத் தமிழ்நாட்டில் அன்று தொட்டிருந்து வரும் விடுதலை யுணர்வே தலையாய காரணமாக விருக்க முடியும். அண்மையில் நடந்த தேர்தலில் பெருமளவில் மக்கள் துணையைப் பெற்று மாநில அரசவையிலும், நடுவண் அரசவையிலும் ஒரு நல்லிடத்தை கைக் கொண்ட தென்னக விடுதலைக் கட்சி ஒன்றின் நிலை வலுத்த பின்பு, இத் தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதே, இதனை வலியுறுத்திக் காட்டும்.

தமிழ் நாட்டு மக்கள் ஒரு சிலர்க்கு உடன்பாடற்றவையாக இத்தென்னக விடுதலைக் கட்சிக் கொள்கைகள் இருந்தாலும், அக் கட்சிக்கு அடிப்படையான தமிழக விடுதலை யுணர்வையும், வரலாற்று உண்மையையும், எவரும் மதியாது புறக்கணித்துவிடல் முடியாது. ஓரளவிற்கு அந்தக் கட்சியின் உணர்வு, தமிழர் தம் உள்ளத்துக் கனல் விட்டுக்கொண்டிருக்கும் உரிமை உணர்வே என்று கூறுவதானாலும் அது மிகையாகாது.