பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

179

ஆனால் சேர, சோழ, பாண்டிய நாடு எனப் பண்டையக் காலத்தில் அழைக்கப் பெற்றுவந்த தமிழ் நாட்டு மக்களின் ஏற்பு ஒப்புதலை (acceptance) பெறாமலேயே இந்தியத் துணைக்கண்டத்தினுள் வந்தேறியவர்களாகிய ஆரிய ஆட்சியாளர்களால் பிரிவினைத் தடைச்சட்டம் அவர்களின் அடிமைகள் நிரம்பிய நாடாளு மன்றத்தில் தன் இன நலம் காத்திட இயற்றப்பட்டதாகும். அதனைத் தமிழ் மக்களின் தொண்டைக்குள் வலிந்து சட்டப் புறம்பாகத் (illegal) திணித்துள்ளனர்.

ஆங்கிலேயர்கள் 1947-ஆம் ஆண்டு இந்தியத் துணைக்கண்ட ஆட்சியுரிமையை ஆரியர்களிடம் ஒப்படைத்தமையால் தமிழர்கள் தமது நாட்டுரிமையை இழந்தார்களே தவிர , தமிழ்மக்களின் ஒப்புதல் படி அவர்கள் இந்திய ஒன்றியத்தில் (Indian Union) சட்டப்படி இணைக்கப்படவில்லை என்பது நமக்கு உதவ முன்வந்துள்ள சட்ட வல்லுநர்களின் (Q.C) கருத்தாகும்.

இக்கருத்துகளின் அடிப்படையில் பிரிட்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் தமிழர்களுக்குக் கீழ்வரும் வேண்டுகோளைக் கொடுத்துள்ளது.

'நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர்; நாங்கள் அனைத்திந்திய கட்சியினர்’ எனக் கூறிவரும் திரைப்படக் கவர்ச்சியும் அறியாமையும் மிக்க மக்களும், தமிழர்கள் எனக் கூறிக்கொள்ள வெட்கப்பட்டு, இந்தியத் தேசியம் பேசி அரசியல் ஊதியம் பெறும் வீடண அநுமன்களும், 'நாங்கள் அன்று பிரிவினை கேட்டோம், இப்பொழுது உண்மையாகக் கேட்கவே இல்லை; உறுதியிட்டுக் கூறுகிறோம். நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர்’ என்று சொல்லுக்குச் சொல், கூட்டத்திற்குக் கூட்டம் இந்திய தேசியத் திருப்பாட்டுப் பாடித் தாம் வாழ வழி தேடிக்கொண்ட தமிழ்ப் பதடிகள் சிலரும், எக்கட்சியும் சாராத தன்மானமுள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களும், ஆசிரியப் பெருமக்களும், மாணவ மணிகளும் ஆங்கில வழக்குரைஞர்களின் பரிந்துரையை எண்ணிப்பார்க்க வேண்டுமெனவும், கட்சிக் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிக் கிடப்போர் இதுநாள் வரை தமிழ் இனத்திற்குச் செய்த மாபெரும் வஞ்சகத்திற்கு மன்னிப்புப் பெறும் வகையில், தாம் தமிழர் என்பதையுணர்ந்து தமிழ்த்தரையின் விடுதலைக்குப் போரிட வாருங்கள்” எனவும் பிரிட்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் அறைகூவி அழைக்கிறது.

- தென்மொழி, சுவடி : 14, ஓலை 5-6, 1977