பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

17

இவ்விடுதலை உணர்வு இன்று நேற்று ஏற்பட்டதா? அன்றி வெள்ளையரை எதிர்த்துப் பொருதிக் காலக் கோளாறுகளால் தன்னாட்சியை மறைமுகமாக நிறுவிக் கொண்ட பேராயக் கட்சியின் விடுதலை உணர்விற்குப் பின்னர் தோன்றியதா? பருக்கைச் சோற்றுக்குக் கையேந்தி, படுக்கும் பாய்க்கு உடல் சொரிந்து, பிறன் வீசி எறியும் ஒரு சில காசுகளைக் குனிந்து பொறுக்கிக் கும்பி நிறைக்கும் தன்மானமிழந்த தம்பிரான்மார்கள் ஒரு சிலரன்றி, உண்மைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவனுடைய உள்ளுணர்விலும் எழுந்ததாகும் இத்தமிழக விடுதலை வேட்கை இதை எவராலும் அழித்துவிடல் முடியாது. தமிழ் மொழி உள்ளளவும் தமிழன் இருப்பான். தமிழன் இருக்கும் வரை, தமிழ் நாட்டுணர்வும் இருந்தே தீரும் என்பதை எவரும் மறந்துவிடல் வேண்டாம்.

மொழி, இலக்கிய, பண்பாட்டு, சமய அடிப்படையில் தனக்கு ஓரகம் நடைபெறுங் காலத்து ஒவ்வொரு தமிழனும் எழுந்து தன் விடுதலையுணர்வை வெளிப்படுத்தியே தீர்வான் வெறும் சட்ட திட்டங்களாலும், அடக்கு முறைகளாலும் இதனை அடக்கிவிடல் முடியாது. போலி ஒற்றுமை மணிலாக் கொட்டையின் புறத் தோலைப் போன்றது. வேட்கையுள்ளத்தால் அக்காய் உடைத் தெறியப்படும்பொழுது மணிகள் விடுதலை பெற்றே தீரும்.

முற்றி முதிர்ந்து வளர்ந்து பரந்து சிறந்த ஓரினத்தின் ஆணி வேரை ஒருவராலும் அவ்வளவு எளிதில் அறுத்தெறிந்து விடல் முடியாது. தமிழ் மொழி விடுதலை, தமிழ் இலக்கியப் பண்பாட்டு விடுதலை, தமிழர் சமய விடுதலை என்பவற்றிற்குத் தீங்கு நேருங்கால் நாட்டு விடுதலை முழக்கம் எம்மருங்கும் ஒலித்தே தீரும். அக்கால் விடுதலை முழக்கமிடும் இத்தென்னகக் கட்சியோடு ஒவ்வொரு தமிழனும் ஒன்றித் தன்னை முழுமைப்படுத்திக் கொள்ள நேரினும் நேரும் என்று அரசியலார்க்கு எச்சரித்துக் கூறுகின்றோம். சாவைவிட அடக்கியொடுக்கப் படுந்தன்மை. இனிப்பதன்று. இந்திய நாட்டின் ஒற்றுமை உணர்வைவிடப் பன்னூறாயிர மடங்கு உயர்ந்து வலிந்ததாகும் தமிழக விடுதலை யுணர்வு. அதைச் சட்டத்தால் அடக்குதல் சீறும்புயலை மீன் வலை கொண்டு மறிக்கும் மடமைச் செயல் போன்றது. குடியரசு கொள்கைக்கே மாறான இச் சட்டம் நன்மை பயப்பதன்று. மேலும் மேலும் விடுதலை உள்ளத்தைக் கிண்டிக் கிளறுவதாகும். ‘துஞ்சு புலி இடறிய சிதடன்’ போல ஆளுநர் ஆகிவிடக் கூடாது என்பதே நாம் விரும்புவதாகும்.

- தென்மொழி, சுவடி 1 ஓலை-2, 1963