பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

205

அறிவுள்ளவர்களும், உணர்வுள்ளவர்களும் இதை எப்படி ஏற்க முடியும்? எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து ஓங்கிக் குரல் கொடுத்தால் தவிர, நமக்குள்ள எல்லாமே இன்னும் சில ஆண்டுகளில் பறிபோய்விடும். இந்தத் தலைமுறையில் நாம் நடுவணரசிடமிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வில்லையானால், வேறு எப்பொழுதுமே எந்தச் சூழ்நிலையிலுமே நம்மை விடுவித்துக் கொள்ள முடியாமற் போய்விடும். பின்னர் என்றென்றுமே நாம் அடிமைகளாகத்தான் கிடக்க வேண்டும்!

இன்றைய நிலையில் இந்தியத் தேசியம் என்னும் பெயராலும், ஒருமைப்பாடு என்னும் பெயராலும் நம் மொழி, பண்பாடு, கலைகள் ஆகிய அனைத்துக் கூறுகளுமே ஆரியப்படுத்தப்படுகின்றன. நம் இலக்கியங்கள், வரலாறுகள் அனைத்தும் மூடிமறைக்கப்படுகின்றன. மற்ற இனங்களுக்கு அஃது ஊதியம்; நமக்கு இழப்பு! இந்த நிலைகள் தொடருமானால், பிற முன்னேறாத இனங்களுடன் நாமும் முன்னேறாத இனமாகவே கிடக்கவேண்டும். இது கொடுமை! மிக மிகக் கொடுமை! இஃது ஓர் இன அழிப்பு முயற்சியே!

இந்தியாவிலேயே மிகவும் பண்பட்ட, அறிவு வளர்ச்சியுற்ற, மிகச்சிறந்த மூத்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினம், வேறு காட்டு விலங்காண்டி இனங்களுடன் ஒன்றிணைந்து தன் தனிச்சிறப்பியல், கூறுகளை இழந்து கொண்டு, பின்தங்கிக் கிடக்க வேண்டும் என்னும் அறியாமைக்கும் அடிமைப்படுத்தத்திற்கும் நாம் இசைந்துவிடக் கூடாது. நமக்கென்று நம் நாட்டை நாம் பெற்றுத் தீரவேண்டும் என்பதைக் கட்டாயக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

தில்லிக்கு நேர் எதிர் முயற்சிகளைத் தமிழகமும் தமிழர்களுந்தாம் செய்ய முடியும். ஏனெனில் ஆரியத்துக்கு நேர் எதிரான கூறுகளைக் கொண்டது தமிழினமே! எனவேதான் தமிழினத்தை ஒருமைப்பாடு என்னும் பெயரால் தில்லி, ஒடுக்கப் பார்க்கிறது. ஒழிக்கப் பார்க்கிறது. இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு தமிழீழச் சிக்கலில் அது கையாளுகின்ற முறையே. தமிழினத்தை மறைமுகமாக அழிக்கின்ற சூழ்ச்சியையே, தமிழீழச் சிக்கவில் தில்லி அரசு கையாள்கிறது. இங்குத் தில்லிக்கு அடிமையாகிக் கிடக்கும் பேராயக் கட்சிகள் இந்த உண்மையை உணர்ந்து, தமிழின உணர்ச்சி பெற வேண்டும்.