பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

219

புறக்கணித்து விடுமோ என்று அஞ்சி 'சாற்றில் மலம் கிடக்கிறது; கொஞ்சம் இறுத்தால் போல் ஊற்று’ என்னும் பாணியில், அடிக்கடி தமிழினம் தமிழினம் என்று பேசுவதும், 'தமிழா இன எழுச்சி கொள்' என்று கடந்த இருபத்தைந்தாண்டுகளாகக் கூறிவரும் உணர்வுக்குரலை உரிமை முழக்கத்தை, ஏதோ இப்பொழுதுதான் இவர்கள் புதிதாகக் கண்டு சொல்பவர்களைப் போல, நொடிக்கு நூறு முறை கூறிப் புரட்சிக்குக் கட்டியங்காரர்களாக நடந்து கொள்வதையும், பார்க்கிறோம். இன்னும் சிலர் குமரிக்கண்ட வரலாற்றையும் பஃறுளியாற்றின் கடல்கோளையும் கூட கூட்டங்கள் தோறும் எடுத்து முழக்கும் வழக்கம் கூடிவருகிறது. இவற்றாலெல்லாம் நமக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியே. நாம் தாம் சொன்னோம், செய்தோம் என்பதில் தமிழர்களுக்குள் போட்டியிருப்பதும், அவ்வினத் தாழ்ச்சிக்கு ஒரு காரணமே! நமக்கு வேண்டுவதெல்லாம், யார் குத்தி அரிசியானாலும் நல்லது என்பதுதான். இவையிவற்றை இத் தமிழினம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் நமக்கு முகாமையானது. அவற்றை யார் செய்கிறார்கள் என்னும் பொறாமைப் பார்வையன்று. வெறும் ஆரியம், திராவிடம் என்றும், திராவிட நாடு திராவிடர்க்கே என்றும் கூறப் பெற்ற பொழுதிலும்கூட நாம் அவற்றை மறுத்துத் திராவிடம், என்பது சரியான கொள்கையன்று என்றும் தமிழம் என்பதும். ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்பதுந்தாம் வரலாற்று அடிப்படையில் சரியானதாகும். என்றும் எழுதியும் பேசியும் வந்தோம். ‘தென்மொழி’ தன்னை வெளிப்படுத்திக் கொண்டபொழுதே தனிநாட்டுக் கோரிக்கையைத்தான் முன் வைத்தது. அதன்பின் மற்ற அரசியல் கட்சிகள் எங்கெங்கோ சுற்றி மூக்கைத் தொட்டு வந்து அக் கொள்கையால் விளைவு வரும் இந்நேரத்தில் நாம் தொடக்கத்தில் வரையறுத்த “மொழியால் இனம். இனத்தால் நாடு” என்னும் மெய்ம்மத்தை உள்ளட்க்கிய ‘மொழி, இனம், நாடு’ என்னும் நம் முப்படி முழக்கத்தைச் சிலர் ஏதோ தங்களின் மூலக் கொள்கையைப் போல் முழங்கத் தொடங்கியுள்ளனர். எஃது எவ்வாறாயினும், நம் முயற்சிகளால் வரும் விளைவுகளுக்காகவே அனைத்து நிலைகளிலும், நாம் பொறாமையற்ற, வஞ்சனையற்ற, பயனைக் கூறுபோட்டுக் கொள்ளாத நடுநிலைப் பார்வையால் காலத்தை எதிர்பார்த்திருக்கின்றோம். இது நிற்க.

தமிழினத்தின் உண்மையான முன்னேற்ற முயற்சிகளை விரும்பும் நாம் அனைவரும். அவரவர்களுக்குச் சரியான வழிவகை என்று நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொள்கைகளின் வழியில் பாடாற்றி