பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

வேண்டும் விடுதலை

வருகின்றோம். அவற்றுள், “தமிழர்க்கென்று தனி நாடு தேவையில்லை; அவர்கள் இந்தியத் தேசியத்தில் இணைந்து விடுவதே அனைத்து நிலைகளுக்கும் நன்மை பயப்பது, தேசிய ஒருமைப்பாட்டைத் தவிர்த்துப் பிரிவினை பேசுவதால் பயனில்லை” என்பது. வடவர்க்கும் பார்ப்பனியத்திற்கும் ஏற்கனவே தம் தம் சிந்தனைகள் , செயல்கள் ஆகியவற்றை அடகுவைத்து விட்டு, அடிமைப்பட்டுப்போன தந்நலக்காரர்களின் கூற்று. இவ்விரண்டுங் கெட்டான்களின் அடிமைக் கொள்கையால், அத்தேசியக்கங்காணிகளுக்கே நன்மையாகுமேயன்றி, தமிழின மக்களுக்கு என்றைக்கும் ஓர் எள்ளளவும் நன்மையோ முன்னேற்றமோ கிடைக்கப் போவதில்லை.

அடுத்தபடி, பொதுவுடைமை என்னும் ஓர் உண்மையான இன முன்னேற்ற மெய்ம்மைக் கொள்கையின் பெயரால் போலித்தனமான அரசியல் குமுகாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, உருசியாவுக்கும் போகாமல்,சீனாவுக்கும் செல்லாமல், இடையில் தில்லியிலேயே விழுந்து கிடக்கும், சாதி மதவுணர்வுகள் சாகா மனங்கொண்ட பொக்கைப் பொதுவுடைமைக் காரர்களால் தமிழினத்திற்கோ, தமிழ்நாட்டுக்கோ எவ்வகை விளைவும் எக்காலத்திலும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இத்தகையவர்களின் பேச்சுக்கோ செயலுக்கோ எவ்வகைத் தொடர்புமில்லை. இந்த உலகம் அழியுமட்டும் இவர்கள் நின்று கொண்டிருக்கும் குழப்ப மேடையில் இருந்து இவர்கள் அகலப் போவதுமில்லை. இவர்களுக்கு ஒரு தேசிய இன உரிமை என்பதிலேயே தெளிவான கருத்து இல்லை. ‘இந்தியத் தேசியம்’ என்னும் மாய்மாலக் கோட்டைக்குள் புகுந்து கொண்ட இவர்கள் வெளிவருவது கடினம்.

இனி, இவர்களையும் தவிர்த்து, இங்குள்ள சிலர் காலத்தால் நசுங்கிய, காந்தியின் பெயராலும், கருமமே கண்ணாகக் கொண்ட காமராசரின் உழைப்பாலும், பேராய வெள்ளையடித்துக் கொண்டு அவ்வப்பொழுது, தமிழ் என்று வாய்ச்சிலம்பமாடுவதும், தமிழர் நலன் என்று கைக்கம்பு வீசுவதுமாக, வெள்ளை ஊர்திகளில் வீதியுலா வந்து, தங்களின் சாதிக் கோட்டையின் வலிவான கதவுகளுக்குப் பின்னால் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களால் இந்நாட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு சிற்றெறும்புக்கும், ஒரு சிறு அளவினும் நன்மையில்லை. இவர்கள் அள்ளிக்கொடுக்கும் காசுகளுக்கு அங்காந்து திரியும் சாதிச் சாரணர்களே இவர்களின் ஐந்தாம் படைத் தொண்டர்கள்! இவர்களின் ஆரவாரக் கூப்பாடுகளில் இத்தலைவர்கள் மெய் மயங்கிக் கிடப்பதே இவர்களின் வாழ்க்கை. இவர்களின் பொய் போலி, உரைகள், இவர்கள் ஊரைவிட்டுப் போனதும், வெறும்