பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

225



 
இந்தியாவில் தேசிய
இனங்களின் எழுச்சிகள்


லகெங்கிலும் உரிமைப் போராட்டங்கள் கிளர்ந்து வரும் காலம் இது. இவ்வகையில், ஆங்காங்கு ஒடுக்கப்படும் மக்கள், பல்வேறு வகையாகத் தங்களுக்கு மக்கள் குமுகாயத்திடமிருந்து கிடைக்க வேண்டிய நயமான உரிமைகளுக்காகப் போராடி வருவதை, உலக நோக்கில் கவனம் செலுத்துவார் அறிந்து கொள்ளலாம். அத்துடன் இப்போராட்டங்களை ஆளுமைக்காரர்கள், பல்வேறு கோணங்களில் ஒடுக்கி வருவதையும் கூடவே உணரலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்தியா ஒரே இனமக்கள் வாழும் நாடு அன்று என்பதை அனைவருமே உணர்ந்திருக்கின்றோம். அவ்வவ் வினங்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவ்வச் சிக்கலுக்காக, அவ்வவ் வினமக்களும், தங்களைத் தேசிய இனமக்கள் என்று உரிமைப்படுத்திக் கொண்டு, ஆங்காங்கு சிற்சில எழுச்சிகளைக் காட்டி வருகின்றனர்.

ஆனாலும், அதிகார ஆளுமைக்காரர்கள், இவர்களுக்குரிய சிக்கல்களையெல்லாம் நன்கு எண்ணிப் பார்த்து அணுகித் தீர்வு செய்ய இயலாமல், அவற்றை வேறுவேறு பெயரால், மூடி மறைக்கவும், அடக்கி ஒடுக்கவும் முயன்று வருகிறார்கள்.

செய்தித்தாள் படிப்பவர்களுக்குப் பஞ்சாப், அசாம், மிசோரம், நாகாலாந்து, ஒரிசா, திரிபுரா, மணிப்பூர் முதலிய இடங்களில்