பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

வேண்டும் விடுதலை

அறிவுகள். இயக்கங்கள், முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீரே! பாலை நில நிலவே!

இனி, பேச்சு, பேச்சு என்று நாம் பேசுகின்ற கால இடைவெளிக்கு இடமே தரக்கூடாது. இந்தப் பேச்சால் முதலில் எதிரியின் தாக்குதல் குறைந்ததா? இல்லையே, மாறாக எதிரியின் கைகளையன்றோ வலுப்படுத்தி யுள்ளது. இவ் விணக்கப் பேச்சு என்னைறக்குத் திம்புவில் தொடங்கினதோ அன்றிலிருந்து இன்று வரை ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்னும் வகையில், நாளுக்கு நாள் மேலுக்கு மேல் சிங்கள வெறியரின் தாக்கங்களும் அழிவுகளும் அதிகமாகி உள்ளனவே தவிர, ஓர் எள்மூக்குத்துணையும் குறைய வில்லையே! இனியும் பேச்சு எதற்கு? இதைப் பேச்சு தொடங்கு முன்பிருந்தே சொல்லி வருகிறோம். இனியும் போராளிகள் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தப் பேச்சைத் தவிர்ப்பதால் சில விரும்பத்தகாத விளைவுகளை நாம் எதிர்நோக்க வேண்டியிருந்தாலும், அவற்றையும் நாம் வரவேற்கவே வேண்டும். சாகத் துணிந்தவனுக்கு கடல் நீர் முழங்கால் ஆழமன்றோ? ஒன்றால் நாம் அனைவருமே வாழ்ந்தாக வேண்டும்; அன்றால் நாம் அனைவருமே போராடிச் செத்தாக வேண்டும்! இதில் பேச்சென்ன மூச்சென்ன? இப்பொழுது மட்டும் வாழவா வாழ்கிறோம்? செத்துக்கொண்டுத் தானே உள்ளோம்! எனவே, இனியும் எதிரி வலுப்பட நாம் கால இடையீடு தருதல் கூடாது.

அடுத்து, இந்தியாவின் அணுகுமுறையே கரவானது; ஓரவஞ்சனையானது; நயன்மையில்லாது; நடுநிலையற்றது. நாம் இன்னும் அதை நம்பிக் கொண்டுதானே உள்ளோம். இது வரை இராசீவ் காந்தியின் வாயிலிருந்து இலங்கைப் பேயர்களைக் கண்டிக்கும் ஒரு சொல்லாகிலும் வெளியே வந்துள்ளதா? எவராவது சொல்லமுடியுமா? கண்டிக்கவே மனம் வராத அவர்களிடம், நன்மையான முடிவை எதிர்பார்க்க முடியுமா? ஆனால், ஏனோ, எப்படியோ தெரியவில்லை, இந்தியாவின், இராசீவ் காந்தியின் கரவான, நம்மை மெலிவுபடுத்தும் முயற்சிகளில் இன்னும் நம் போராளிகள் சிலர் நம்பிக்கை வைத்துள்ளனர். இதுநம் முயற்சிகளை எங்குக் கொண்டு போய் விடுமோ, தெரியவில்லை! அஃது அவர்களுக்கும், அந்த இராசீவ் காந்திக்குமே வெளிச்சம் நம் கருத்துகள் காலத்தால் பொய் போகாதவை என்பதை அந்தக் காலமேதான் உணர்த்த வேண்டும். அதுவன்றி, வேறு வகையாக, நாம் இதைவிட வெளிப்படையாக எப்படி உணர்த்துவது?

இனி, இறுதியாகவும் உறுதியாகவும் நாம் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்