பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

231

தமிழீழம் கிடைத்துத்தான், தமிழ் நாட்டுக்கான முயற்சிகள் நடைபெற வேண்டும் என்பதாக இதுநாள் வரை, ஒருவகையாக நாம் நம்பியிருந்தோம். ஆனால் இன்றைய நிலையில், தமிழீழ முயற்சிகள் அவ்வளவு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. நம்பிக்கை இயல்பான நம் உள்ள ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பினும், தமிழீழப் போராளிகளின் செயல் முயற்சிகளும் நடைமுறைப் போக்குகளும் அந்நம்பிக்கையை உடைப்பதாகவே உள்ளது.

எனவே, தமிழ்நாட்டுக் கோரிக்கையை நாம் உடனடியாக எழுப்பியாக வேண்டும். அதை இங்குள்ள தமிழினக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வெளிப்படுத்தியாக வேண்டும். இதற்காக நாம் எந்த நிலையிலும், யாருடனும் ஒன்றிணைய இரு கைகளை நீட்டி அணியமாக உள்ளோம். இந்தக் கோரிக்கை தான் இந்திய அரசை உடனடியாகத் தமிழீழத் தீர்வை நோக்கி நடையிடச்செய்யும் உந்து வேகத்தைக் கொடுப்பதாக இருக்க முடியும்! தமிழ்நாட்டில் இப்படி யொரு கோரிக்கை, இலைமறை காயாக இருப்பது நடுவணரசுக்கும், இராசீவ் காந்திக்கும் தெரியும். இருப்பினும் அது, வெறும் குரல் கோரிக்கையாகத்தான் இருக்கிறது என்பதாலும், அதைக் கைவைத்துப் பெரிதுப்படுத்தக் கூடாது என்னும் தந்திர உத்தியாலும், இதுவரை, எந்தவகையான நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் முன்வராமல் இருக்கின்றனர். ஆனால், இங்குள்ள அனைத்து இனநலக் கட்சிகளும் ஓங்கி அக்கொள்கையை ஒரு பெரும் முழக்கமாக எழுப்பும் பொழுது, அவர்கள் கட்டாயம் அதைச் செவிமடுத்தே ஆகவேண்டும். அதன்பின் அவர்களின் செயற்பாடுகள் நடவடிக்கைகள் மிக வேகமாகத் தீவீரமடையும் என்றாலும், அத்தீவிரந்தான் தமிழீழ நெருப்பை நீரூற்றி அணைக்க ஓர் உந்து விசையை அவர்களுக்குத் தரும். இந்த அணுகு முறை பயனளிக்குமே தவிர, எவ்வகையாலும் பயனில்லாமல் போகாது என்பதை உறுதியாக எண்ணிக்கொள்ள வேண்டும். மேலும் இந்தக் கோரிக்கை இங்கிருந்து எழுப்பப் பெறுமாயின், உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களின், ஒட்டு மொத்தமான விடுதலைக் குரலும் அக்கோரிக்கை முழக்கத்துடன் ஒன்றிணையும் என்பதில் ஐயமே இல்லை.

ஆனால், இங்கிருக்கும், ஏனோ தானோ போக்குகளைக் கொண்ட இயக்கங்கள் எண்ணிப் பார்க்க வேண்டுமே! அஃது என்று நடக்குமோ? பொறுத்திருந்துதான் சொல்ல் முடியும்!

- தென்மொழி, சுவடி : 21, ஓலை :11, 1985