பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

வேண்டும் விடுதலை

மக்களுக்காகவும் முதலைக் கண்ணீர் வடிப்பதும் எத்துணையளவு கரவான கொடுமை! இதை இராசீவுக்கு நினைவூட்டத்தான் குடமுருட்டிப் பாலத்தில் குண்டு வெடித்தது!

ஆனால், பல்லாயிரக் கணக்கான கருவிக் காவலர்களின் அதிகாரச் சுவர்களுக்குப் பின்னால், இந் நாட்டின் வல்லதிகாரி இராசீவ் காந்தி திருவையாறு வந்ததும், தியாகராயர் திருப்போற்றி விழாவைத் தொடங்கி வைத்ததும், வழக்கம்போல் நடந்தேறி விட்டன.

இந்த நாட்டின் தலைமை அதிகாரம் பார்ப்பனர்க்கே என்பதை மெய்ப்பிக்கும் அளவில், தியாகராயர் பெயராலும் கலை, பண்பாடு என்னும் புனைவாலும் பார்ப்பனக் கும்பலுக்கு நடுவில், பார்ப்பனீய, முதலாளிய, மதவெறி, இந்திவெறி முதலிய உணர்வுகள் கொண்ட இரண்டுங்கெட்ட, பார்ப்பனத் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி திருவையாற்றில் உள்ள பார்ப்பன அதிகாரி ஒருவரின் வீட்டில் உணவுண்ண இசைந்திருக்கிறார் எனில், இந் நாட்டு மக்களுக்கு உண்மையான விடிவு எவ்வாறு கிடைக்கப் போகிறது?

தலைமையமைச்சர் ஒருவர் தமக்குக் கீழுள்ள அதிகாரி ஒருவரின் அதுவும் அய்யர் ஒருவரின் வீட்டில் உணவுண்ணுவது என்றால், இந் நாட்டின் அரசியக்கம் எப்படிச் சரியாக நடக்க முடியும்? ஊழல் எவ்வாறு ஒழியும்? நேர்மை எங்ங்ன் விளையும்?, நடுநிலையாளர் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இவை எல்லாவற்றுக்குமான ஒட்டுமொத்த எச்சரிக்கைதான் குடமுருட்டிக் குண்டு! அந்தக் குண்டு திருவையாற்றில் மட்டுந்தான் வெடிக்கலாம் என்பது நாட்டு நிலையாக இல்லை. பஞ்சாபில் வெடித்துக் கொண்டுள்ளது! அசாமில் வெடித்தது! மிசோராமில் வெடித்தது! நாகலாந்தில் வெடித்தது! வங்காளத்தில் வெடித்தது! குசராத்தில் வெடித்தது! திரிபுராவில் வெடித்தது! இன்னும் பல இடங்களில் வெடிக்க உள்ளது! எழுச்சி கொண்டுவிட்ட இத் தொடர் நிகழ்ச்சியை இனி வாயால் ஊதி அணைத்துவிட முடியாது.

எந்நாட்டிலும், எப்பொழுதும், புதுமைப் புரட்சிக்கு ஆதரவாக எப்படி மக்கள் பலர் உள்ளார்களோ, அப்படியே அதற்கு எதிராகவும் ஆட்சிக்குச் சார்பாகக் கைத்தாளம் போடவும் மேல்மட்ட வாழ்க்கையினர் இருக்கவே செய்வர். அவர்களை வைத்து மட்டும் ஆட்சியினர் மதிமயங்கிவிடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையே இக் குடமுருட்டிக் குண்டு நிகழ்ச்சி!

— தமிழ்நிலம், இதழ் எண். 69 பிப்பிரவரி 1986