பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

வேண்டும் விடுதலை

ஆனால், நம்போல், மக்கள் நலம் கருதித் தூய தொண்டிலோ, நேர்மையான நடவடிக்கைகளிலோ உண்மையான போக்கிலோ, ஆனால் அரசைச் சாராமல் வேறு எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், இயங்கும் ஒருவர்க்கு, இத்தகைய காவல்துறைக் கடுபிடிகளும், நெருக்கங்களும், உசாவல்களும், மிரட்டல் உருட்டல்களும் தாம் பரிசுகளாகக் கிடைக்கின்றன.

இருப்பினும் இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல், மனம் சோர்வுறாமல், செயல் நெகிழ்ச்சி கொள்ளாமல் நாம் பாடாற்றியாக வேண்டும்; தொண்டு செய்தாக வேண்டும். ஏனெனில் இது நாமே விரும்பி ஏற்றுக்கொண்ட தூய பணி; மக்கள் தொண்டு; காலத்தால் கட்டாயப்படுத்தப் பெற்ற தேவையான கடமை!

இந்தத் தூய மக்கள் தொண்டு, தமிழின முன்னேற்றமும் இன, நாட்டு விடுதலை நோக்கமும் உயிராகக் கொண்ட பணியானாலும், இன்றைய பார்ப்பனிய முதலாளிய நடுவணரசுக்கு நேர் எதிரானது! அதன் கரவான அரசியல் அடிமைத்தனத்திற்குத் துளியும் அடி பணியாதது. இங்குள்ள பிற ஒப்போலை - பதவி நாட்டம் கொண்ட கட்சிகளைப் போல் அல்லாமல், அரசை நேரடியாக எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள வேண்டும் என்னும் இனமான, உரமான கொள்கையை உடையது, இதன் வலிமை நாளுக்கு நாள் வளர்ந்து வருவது. எனவே, இதை எவ்வாறாயினும் ஒடுக்கிவிட வேண்டும் என்று இராசீவ் அரச நினைப்பதில் வியப்பில்லை. அதற்காக, ஒரு கால கட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அதற்கு நல்ல சூழலாக அண்மையில் தமிழகத்தில் சில குண்டுவெடிப்பு நிகழ்ச்சிகள் நடந்ததை அடிப்படையாகக் கொண்டு, அதற்குப் பின்னணியாக நாமும் நம்மைச் சார்ந்த தொண்டர்களும் இருக்கவேண்டும் என்று கருதி, நம்மைக் கடந்த பதினைந்து இருபது நாள்களாகக் கடுமையான உசாவல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், நடுவண் ஒற்றுத் துறையைக் கொண்டு, ஆளாக்கி வருவதாக நாம் கருதவேண்டி உள்ளது

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாம் நம்மை அணியப்படுத்திக் கொண்டவர்களே என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே நாம் இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை. மாறாக, நாம் நம் கொள்கையில் இன்னும் வலிவுடையவர்களாகவே இயங்கப் போகிறோம் என்பது நம் வரலாறு போன்ற உண்மையும் உறுதியும் வாய்ந்ததாகும்!